இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியை வென்று வலுவான முன்னிலையில் இருக்கிறது!
இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு மிகச் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் ரன் மிஷின் நெருக்கடியான நேரத்தில் சதம் அடித்து அணியை மீட்டெடுத்து 121 ரன்கள் ரன் அவுட் துரதிஷ்டவசமாக ஆனார்!
அவருக்கு இந்த சதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 29ஆவது சதமாகும். ஒருநாள் கிரிக்கெட்டில் 46 மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஒன்று என மொத்தம் 76 சதங்கள் அவர் விளாசி தள்ளி இருக்கிறார். அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் சர்வதேச அளவில் சச்சினுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்.
அவருக்கு சதங்கள் வராமல் சில ஆண்டுகள் இருந்தது பின்பு ஆசியக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டி20 சதம் வந்தது. பின்பு எல்லா சதங்களும் வந்தது. ஆனால் ஆசியா தாண்டி வெளிநாட்டு மண்ணில் அவருக்கு ஒரு சதம் ஐந்து ஆண்டுகளாக வராமல் இருந்தது. தற்பொழுது இதுவும் தீர்க்கப்பட்டு இருக்கிறது.
சதம் அடித்ததற்கு பிறகு பேசி உள்ள விராட் கோலி ” உண்மையில் மற்றவர்கள் இந்த விஷயங்களை வெளியில் பேச வேண்டும். நான் உள் நாட்டை விட வெளிநாட்டில் அதிகமாக 15 சதங்கள் அடித்து இருக்கிறேன். இது மோசமான சாதனை கிடையாது. நான் உள்நாட்டில் அடித்த சதங்களை விட வெளிநாட்டில் அடித்த சதங்கள் தான் அதிகம். நான் ஐம்பது ரன்கள் தாண்டி ஆட்டம் இழந்தபொழுது சதத்தை தவறவிட்டதாக உணர்ந்தேன். இப்பொழுது 121 ரன்னில் ஆட்டம் இழந்தது இரட்டை சதத்தை இழந்ததாக உணர்கிறேன்.
நான் அணிக்காக என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் எனது திறமைக்கு ஏற்றவாறு நான் பேட் செய்து அணிக்கு முடிந்தவரை உதவி செய்ய வேண்டும்.
இந்த புள்ளி விவரங்கள், மைல்கற்கள் எல்லாமே அணிக்குத் தேவையான நேரத்தில் நான் சிறப்பாக செயல்பட்டு இருந்தால் மட்டுமே சிறப்பான ஒன்றாக இருக்கும். நேர்மையாக அடுத்த 10 15 ஆண்டுகளில் இந்த சாதனைகள் எல்லாம் அர்த்தமில்லாததாக ஆகிவிடும்.
நான் சரியானபடி விளையாடியதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் நேரத்தை எடுத்துக் கொண்டேன். நான் விளையாடும் பொழுது அவர்கள் மிக ஒழுக்கமாக பந்து வீசினார்கள். பந்து மென்மையாகவும், மேற்பரப்பு மெதுவாகவும், ஆடுகளத்திற்கு வெளியே மைதான வெளிப்பக்கங்கள் மெதுவாகவும் இருந்தது. இதில் ரன்கள் எடுப்பதற்கு சுலபமாக இல்லை. இப்படியான நிலையில் எனது சதம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியிருக்கிறார்!