இதனை வருஷமா செஞ்சுரி அடிக்கலன்னு மண்டைல ஓடிட்டே இருந்துச்சா? – ராகுல் டிராவிட் கேள்விக்கு அட்டகாசமாக பதில் கொடுத்த விராட் கோலி!

0
640

நீண்ட இடைவெளிக்கு பிறகு செஞ்சுரி அடித்தது குறித்தும், இத்தனை வருடங்களாக செஞ்சுரி அடிக்காமல் இருந்தபோது நிலவிய மனநிலை குறித்தும் கேள்வி எழுப்பிய ராகுல் டிராவிட்டுக்கு பதில் கொடுத்திருக்கிறார் விராட் கோலி.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் முன்னாள் கேப்டன் விராட் கோலி அபாரமாக விளையாடி கிட்டத்தட்ட 1200 நாட்களுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் விலாசினார்.

- Advertisement -

இந்த போட்டியில் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் துரதிஷ்டவசமாக பேட்ஸ்மேன் ஒருவர் குறைவாக இருந்த காரணத்தினால் அந்த வாய்ப்பு நலுவியது. 186 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

இறுதியில் 4வது போட்டி டிராவில் முடிந்தது. 2-1 என இந்திய அணி நான்காவது முறையாக தொடர்ந்து பார்டர் கவாஸ்கர் டிராபியை கைப்பற்றியது. போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் விராட் கோலி இருவரும் உரையாடலில் ஈடுபட்டனர்.

அப்போது பல்வேறு கேள்விகளை ராகுல் டிராவிட் விராட் கோலி முன்பு வைத்தார். அதில் குறிப்பாக, இத்தனை வருடங்களாக டெஸ்டில் செஞ்சுரி அடிக்கவில்லை என்பது மனதில் ஓடிக்கொண்டே இருந்ததா? இந்த இடைப்பட்ட காலங்களில் மனநிலை எப்படி இருந்தது? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த விராட் கோலி,

- Advertisement -

“செஞ்சுரி அடிக்க வேண்டும் என்கிற துடிதுடிப்பு ஒவ்வொரு வீரருக்குள்ளும் இருக்கும். அனுபவமிக்க உங்களுக்கு இது நன்றாகவே தெரியும். ஆனால் குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே நான் இந்த எண்ணத்தை வைத்திருந்தேன்.

முழுமையாக எனது பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும். போட்டிக்கு என்ன தேவை என்பதை வெளிப்படுத்த வேண்டும், பின்னர் மூன்று இலக்க எண் தானாக வரும் என்று உறுதிப்பட நினைத்திருந்தேன்.

அதேநேரம் அனைவருக்கும் நம்பர்கள் மிகவும் பிடிக்கும். அதன் அடிப்படையிலேயே ஏன் செஞ்சுரி வரவில்லை என்கிற கேள்விகள் எழுந்து கொண்டே இருந்தது. மேலும் வெறும் 40-50 ரன்கள் அடிப்பதற்கு எனக்கும் விருப்பமில்லை. நான் அப்படிப்பட்ட ஆளும் இல்லை. 50 ரன்கள் அடிக்கும் பொழுது, என்னால் 150 வரை எடுத்துச் செல்ல முடியும் என்று எண்ணிக் கொண்டே இருப்பேன்.

கடந்த காலங்களில் தொடர்ந்து 40-50 ரன்களில் ஆட்டம் இழந்தபோது, ஏன் என்னால் 150 ரன்கள் வரை எடுத்துச் செல்ல முடியவில்லை என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருந்தது. என்னை வாட்டி வதைத்தது என்றும் கூறலாம்.” என விராட் கோலி பேசினார்.