முன்னாள் உலகச் சாம்பியனுக்கே இடம் இல்லையா.? ஹாசிம் அம்லாவின் WC செமி பைனல் லிஸ்ட்.. இடம்பெற்ற 4 அணிகள் எவை.?

0
4687

2023 ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் கிரிக்கெட் உலகம் முழுவதும் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா கலை கட்ட தொடங்கி இருக்கிறது. உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடும் அனைத்து நாடுகளும் தங்களது 15 பேர் கொண்ட அணியை அறிவித்திருக்கும் நிலையில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள தயாராக இருக்கின்றன.

மேலும் வருகின்ற 29ஆம் தேதி முதல் உலகக் கோப்பை பயிற்சி போட்டிகளும் துவங்க உள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பையில் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் அணிகள் பற்றிய கருத்துக்கணிப்புகளும் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறது. பெரும்பாலான முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் இந்தியா பாகிஸ்தான் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இந்த வருட உலக கோப்பையின் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என அறிவித்துள்ளனர்.

- Advertisement -

ஒரு சில கிரிக்கெட் வீரர்கள் நியூசிலாந்து தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளும் உலகக் கோப்பையின் அரை இறுதிக்கு தகுதி பெற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் ஹாசிம் அம்லா இந்த வருட உலகக் கோப்பை போட்டிகளில் இந்த நான்கு அணிகள் தான் தகுதி பெறும் என தனது கருத்துக்கணிப்பை தெரிவித்திருக்கிறார். தென்னாப்பிரிக்கா அணிக்காக 2006ம் ஆண்டு முதல் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்வை தொடங்கிய இவர் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

இவர் விளையாடும் காலங்களில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளின் தரவரிசையில் முதலிடம் வகித்த வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்க அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் 8113 ரன்கள் குவித்த அம்லா டெஸ்ட் போட்டிகளில் 9282 ரன்கள் எடுத்திருக்கிறார். இவற்றில் ஒரு நாள் போட்டிகளில் 27 சர்வதேச சதங்களும் டெஸ்ட் போட்டிகளில் 28 சர்வதேச சதக்களும் அடங்கும். தென்னாப்பிரிக்க அணி மட்டுமல்லாது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் உலகின் தலைசிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன்களில் ஒருவராக விளங்கியவர் ஹஷீம் அம்லா என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தென்னாப்பிரிக்காவை சார்ந்த செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இந்த வருட உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கு இந்தியா பாகிஸ்தான் சவுத் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெறும் என தனது கருத்தை பகிர்ந்து இருக்கிறார். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற அணிகளும் வலுவாக இருந்தாலும் மேற் சொன்ன 4 அணிகள் உலக கோப்பையின் அரை இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெறும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் இவர் தனது தாய் நாடான தென்னாப்பிரிக்க அணிக்கு உலகக் கோப்பை போட்டிகள் குறித்து அறிவுரையும் வழங்கியிருக்கிறார். இந்த அறிவுரையில்” வெளியில் இருந்து வரும் எந்த ஒரு சத்தத்தையும் பொருட்படுத்தாதீர்கள். உங்களுடைய போட்டிகளிலும் உங்களுடைய பலத்திலும் நம்பிக்கை செலுத்துங்கள். உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டி தொடர்களின் போது நிச்சயமாக அழுத்தம் இருக்கும். அதே நேரம் உங்களுடைய ஆட்டத்தின் மீது கவனம் செலுத்தி வெளியில் இருந்து வரக்கூடிய கவனச்சிதறல்கள் மற்றும் அழுத்தங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்” என தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2019 ஆம் வருட 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணி முதல் சுற்றோடு வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியிலும் நெதர்லாந்து அணியுடன் தோல்வியை தழுவி முதல் சுற்றிலேயே வெளியேறியது. இதன் காரணமாக தென்னாப்பிரிக்க அணி இந்த வருட உலகக்கோப்பை போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்த உலகக் கோப்பை போட்டிகளுக்கும் தென்னாப்பிரிக்கா அணி மிகவும் சிரமப்பட்டு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. உலகக்கோப்பை போட்டி களுக்கான நேரடி தகுதி பெறுவதற்குரிய புள்ளிகளை அந்தக் கால அளவு முடிவதற்குள் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நெதர்லாந்து அணிகளை வீழ்த்தி நேரடியாக தகுதி பெற்றது. இல்லையென்றால் தென்னாப்பிரிக்க அணியும் உலக கோப்பை தகுதி சுற்று போட்டிகளில் விளையாட வேண்டி வந்திருக்கும். நடைபெற இருக்கின்ற உலகக்கோப்பை தொடரில் வருகின்ற ஏழாம் தேதி தங்களது முதல் போட்டியில் இலங்கை அணியை சந்திக்க இருக்கிறது தென் ஆப்பிரிக்கா அணி.