“மும்பை ரோகித்தை கேப்டன் பொறுப்பில் தூக்கியது சரிதான்.. இதான் காரணம்!” – கவாஸ்கர் திடீர் அதிரடி

0
551
Rohit

கிரிக்கெட் தொடர்களில் மிகப்பெரிய வருவாயை ஈட்டக்கூடிய தொடராக இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்திவரும் டி20 தொடரான ஐபிஎல் தொடர் இருந்து வருகிறது.

இப்படி புகழ்பெற்ற தொடரில் 2013ம் ஆண்டு முதல் தற்போது வரை 10 ஆண்டுகள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டன் பொறுப்பில் இருந்து, அதில் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தவர் ரோகித் சர்மா.

- Advertisement -

இதன் காரணமாக தன்னுடைய கிரிக்கெட் கேரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் அவருக்கு மும்பை இந்தியன்ஸ் அணி மிகப் பெரிய மரியாதையை செய்து வழி அனுப்பும் என்று பலரும் எதிர்பார்த்து இருந்தார்கள்.

ஆனால் ஆச்சரியம் அளிக்கும் விதத்தில் ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து கொண்டு வந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைத்தார்கள்.

இந்த நிலையில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஹர்திக் பாண்டியாவை உடனுக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் அறிவித்தார்கள். இப்படி ஒரே நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் ஆச்சரியம் அதிர்ச்சியில் மூழ்கிப் போனார்கள்.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தின் இந்த முடிவை மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. எனவே அவர்களில் சிலர் மும்பை இந்தியன்ஸ் சமூக வலைதள பக்கங்களை பின்தொடர்வதில் இருந்து வெளியேறினார்கள். மேலும் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

தற்பொழுது இந்தப் பிரச்சனை குறித்து பேசி உள்ள சுனில் கவாஸ்கர் “இந்த விஷயத்தில் நாம் சரி தவறு என்று எதையும் சொல்லக்கூடாது. தற்போது அவர்கள் எடுத்துள்ள முடிவு அணியின் நலனுக்கானது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் அவர் பேட்டிங் மூலம் கொடுக்கும் பங்களிப்பு மிகவும் குறைந்து இருக்கிறது.

அவர் முன்பு அணிக்கு பேட்டிங் மூலம் ஸ்கோர் கொண்டு வந்தார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் அது குறைந்த பொழுது, மும்பை இந்தியன்ஸ் அணி பாயிண்ட்ஸ் டேபிளில் 9, 10 இடங்களில் வந்தது. இந்த வருடம் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்குள் வந்தது.

நாம் கடந்த சில வருடங்களில் ரோஹித் சர்மாவின் இயல்பான ஆட்டத்தை ஐபிஎல் தொடரில் பார்க்க தவறிவிட்டோம். தொடர்ந்து அவர் கிரிக்கெட் விளையாடி வந்ததால் கொஞ்சம் சோர்வாகிவிட்டார் என்று நினைக்கிறேன். குறிப்பாக அவர் இந்திய அணிக்கும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் கேப்டனாக செயல்பட்டதில் இது நடந்திருக்கும்.

எனவே மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தனது அணிக்கு புத்துணர்ச்சியை கொடுப்பதற்காக எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இவ்வாறான ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!