நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.
இந்த சூழ்நிலையில் காயத்தில் இருந்து மீண்டும் குணமடைந்து வந்த லக்னோ அணியின் வேகப்பந்துவீச்சாளர் மயாங்க் யாதவ் குறித்து மும்பை அணியின் நட்சத்திர வீரர் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
காயத்திலிருந்து மீண்ட மயாங்க்
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் மயாங்க் யாதவ். கடந்த ஆண்டு மூன்று போட்டிகளில் விளையாடி ஏழு விக்கெட் கைப்பற்றி அசத்தினார். ஆனால் 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசும் அவரது துல்லியமான வேகம் இந்திய ரசிகர்களை மட்டுமல்லாமல் உலக ரசிகர்கள் மற்றும் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் என அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அந்த தாக்கத்தின் காரணமாகவே வங்கதேச அணிக்கு எதிரான சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியிலும் அறிமுகமாக 3 போட்டிகள் விளையாடினார்.
ஆனால் அதற்குப் பிறகு மீண்டும் காயத்தால் பாதிப்படைந்த அவர், இந்த ஐபிஎல் தொடரில் முதல் சுற்று போட்டியில் பங்கேற்காத நிலையில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் களம் இறங்கினார். மும்பை அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்தியது மட்டும் அல்லாமல், ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டையும் கைப்பற்றி 40 ரன்கள் விட்டுக் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து மும்பை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் நமன் திர் மயாங்க் யாதவ் குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
ஸ்பெஷல் விஷயம் ஒன்றும் இல்லை
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “அவர் பந்து வீசுவது குறித்து எந்த ஸ்பெஷலான விஷயமும் ஒன்றும் இல்லை. அவர் பந்து வீசுகிறார், நான் பேட்டிங் செய்கிறேன் அவ்வளவுதான். அவர் நான் எதிர் கொள்ள வேண்டிய இன்னொரு பந்துவீச்சாளர். நான் அவருக்காக அதிகம் தயாராகி விட்டேன் என்று சொல்ல மாட்டேன். அவர் பந்து வீசும் வீடியோக்களை பார்த்து இருக்கிறேன். அவர் எப்படி வீசுவார் என்ன ஷாட்கள் என்னால் விளையாட முடியும் என்பது குறித்து ஆலோசிப்பேன். அவர் நான் எதிர்கொள்ள வேண்டிய மற்றொரு பந்துவீச்சாளர்.
இதையும் படிங்க:விராட் கோலி பற்றி ஹர்ஷா போக்லே எழுப்பிய சந்தேகம்.. ரசிகர் தந்த அசத்தல் புள்ளிவிவரம்.. தோனி ரோகித் பின்னாடி
நாங்கள் கடந்த 5 போட்டிகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். எனவே இது போலவே நாங்கள் தொடர்ந்து வெற்றிகளை பெற்றால் நாங்கள் புள்ளிகள் பட்டியலில் மேல் நோக்கி செல்ல முடியும் என்கிற நம்பிக்கை உள்ளது. எனவே இதேபோன்று விளையாட ஆர்வமாக இருக்கிறோம்” என்று நமன் திர் பேசியிருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 6 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.