நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சூரியகுமார் மற்றும் முகமது சமி இருவரும் விளையாட வாய்ப்பு பெற்றதன் மூலமாக, நடப்பு உலக கோப்பை தொடருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் அனைவரும் விளையாடி விட்டார்கள்.
வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இல்லாத காரணத்தினால் அணியில் அதிரடியான இரண்டு மாற்றங்களை செய்ய வேண்டிய தேவை இருந்தது. சர்துல் தாக்கூரை தொடர முடியாத சூழல் உருவானது.
இதன் காரணமாக சூரியகுமார் யாதவ் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் முகமது சாமி இருவரும் இடம் பெற்றார்கள். இதில் முகமது சமி தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக இறுக்கமாக பிடித்துக் கொண்டுள்ளார்.
நேற்றைய போட்டியில் ரச்சின் ரவீந்தரா மற்றும் டேரில் மிட்சல் இடையே ஒரு பார்ட்னர்ஷிப் உருவானது. ஆனால் இதில் ரச்சின் ரவீந்திரவை ஆரம்பத்திலேயே வெளியேற்றும் எளிய வாய்ப்பை முகமது சமி உருவாக்கினார். அந்த வாய்ப்பை ஜடேஜா கோட்டை விட்டுவிட்டார்.
இதன் காரணமாக நியூசிலாந்து அணி 300 ரன்கள் தாண்டும் என்கின்ற நிலை இருந்தது. ஆனால் மீண்டும் கடைசி கட்டத்தில் திரும்ப வந்த முகமது சமி அதிரடியாக அந்தக் கட்டத்தில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி, நியூசிலாந்து அணியை 273 ரன்களுக்கு கட்டுப்படுத்தினார்.
மேலும் இந்த போட்டியில் 10 ஓவர்கள் வீசிய அவர் 54 ரன்கள் தந்து ஐந்து விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இரண்டு முறை ஐந்து விக்கெட் கைப்பற்றிய ஒரே இந்திய பந்துவீச்சாளர் என்கின்ற சாதனையை படைத்தார்.
ஆரம்பத்தில் இருந்தே சர்துல் தாக்கூர் விளையாடும் இடத்தில் முகமது சமி விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் வரை பலர் கூறி வந்தார்கள். இந்த நிலையில் அவர் நேற்று சாதித்திருப்பதன் மூலமாக அவருக்கான ஆதரவு குரல்கள் இன்னும் அதிகரித்திருக்கின்றன.
இந்த நிலையில் முகமது சமி பற்றி ட்வீட் செய்துள்ள இர்ஃபான் பதான் அதில் “முகமது சாமி ஒரு ஃபெராரி கார் போன்றவர். நீங்கள் அதைக் கேரேஜில் இருந்து எடுக்கும் போதெல்லாம், ஒவ்வொரு முறை சவாரி செய்யும் பொழுது மகிழ்ச்சியையும் சிலிர்ப்பையும் கொடுக்கும்!” என்று கூறியிருக்கிறார்!
Mohammed shami is like Ferrari. Whenever you take it out of garage it will give u same speed thrill and joy to ride every time. @MdShami11
— Irfan Pathan (@IrfanPathan) October 22, 2023