நடப்பு 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் குறைந்தபட்சம் இரண்டு முறை மோதிக் கொள்ளும்படி அட்டவணை அமைக்கப்பட்டிருந்தது. மேலும் இரண்டாவது சுற்றில் இரண்டு அணிகளும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் மூன்றாவது முறையாக இறுதிப் போட்டியிலும் மோதிக் கொள்ளும் ஒரு வாய்ப்பு இருக்கிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு இரு அணிகளும் ஒரு தொடரில் மூன்று முறை மோதிக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்க, இரு அணிகள் குறித்தும், இரு அணி வீரர்கள் குறித்தும், முன்னாள் வீரர்கள் இடையே கருத்து பரிமாற்றங்கள் மற்றும் பல விவாதங்கள் இருந்து வந்தன.
இந்த முறை பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் தரப்பில் இருந்து வந்த பல கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாததாகவே இருந்தன. தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பே, பாகிஸ்தான் அணியின் முன்னாள் பிரபல வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ், ஷாகின் ஷா அப்ரிடியின் காயம் இந்திய பேட்ஸ்மேன்களை நிம்மதி அடைய வைத்திருக்கும் என்று கூறி சலசலப்பை ஏற்படுத்தினார். இதற்கு பதிலடியாக இந்திய வீரர் இர்பான் பதான், ஜஸ்பிரித் பும்ராவின் காயம் பாகிஸ்தான் வீரர்களை நிம்மதி அடைய வைத்திருக்கும் என்று கூறினார்.
இதையடுத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ், இந்திய வீரர்களுக்கு உலக அளவில் இருக்கும் புகழ் அவர்கள் நன்றாக விளையாடுவதால் கிடைப்பது கிடையாது. அவர்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய வருமானத்தால் தான் இந்த புகழ் கிடைத்துள்ளது என்று கூறி மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தினார்.
இன்று இந்தியா இலங்கை அணியுடன் மோத இருக்கும் சூழலில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும் கேப்டனுமான இன்சமாம் உல் ஹ்க், இந்திய அணி வீரர்களின் ஓய்வறையில் பயம் சூழ்ந்து உள்ளதாகவும், இன்று நடக்க உள்ள போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கருத்து தெரிவித்திருந்தார்.
தற்போது மீண்டும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான முகமது ஹபீஸ் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை கூறியிருக்கிறார். அவரிடம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் யுஏஇ ஆடுகளங்களில் ஏன் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினுக்கு வாய்ப்புகள் தரப்படவில்லை என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போதுதான் அவர் சர்ச்சைக்குரிய முறையில் பேசியிருக்கிறார்.
இந்தக் கேள்விக்கு அவர் பதில் கூறும்போது ” ஆசிய கோப்பையில் சாகித் அப்ரிடி அஸ்வின் ஓவரில் தொடர்ச்சியாக இரண்டு சிக்சர்கள் அடித்து அவரது கேரியரை முடித்து வைத்தார். சாகித் அப்ரிடிக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். ஆட்டத்தின் முடிவில் நீங்கள் அடித்த இரண்டு சிக்ஸர்களுக்கு நன்றி சாகித் பாய். எங்களை அவர் அந்த ஆட்டத்தில் வெற்றி பெற வைத்தார் ” என்று சர்ச்சைக்குரிய வகையில் கூறியுள்ளார். அந்தப் போட்டியில் ஷாகித் அப்ரிடி 18 பந்துகளில் 34 ரன்கள் விளாசி இருந்தார்!
Why Ashwin not playing regularly in recent past #PAKvIND matches. Credit to @SAfridiOfficial Boom Boom master strokes in #AsiaCup2014 pic.twitter.com/0MjjUFJ4ia
— Mohammad Hafeez (@MHafeez22) September 5, 2022