ஐபிஎல் தொடரில் ஒரு சில போட்டிகளில் விளையாடினாலும் தனது அதிவேகத்தால் அனைவரது கவனத்தையும் ஈர்த்த மயாங்க யாதவ் தற்போது வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரின் மூலம் இந்திய சர்வதேச அணியில் களமிறங்க இருக்கிறார்.
ஒரு சில போட்டிகளில் மட்டும் ஐபிஎல் தொடரில் விளையாடி காயம் காரணமாக வெளியேறிய நிலையில் அவர் திரும்பி வருவதற்கு விவிஎஸ் லக்ஷ்மன்தான் முக்கிய காரணம் என்று மயாங்கின் பயிற்சியாளர் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிக்காக களம் இறங்கிய இளம் அதிவேக பந்துவீச்சாளரான மயங்க் யாதவ் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகி தனது சிறப்பான அதிவேக பந்துவீச்சு மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மேலும் 156 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி வெளிநாட்டு பேட்ஸ்மேன்களையே திணறடித்தது மட்டுமல்லாமல் ஒரு சில போட்டிகளில் விளையாடி ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இவர் இந்திய அணியின் அடுத்த எதிர்காலமாக கருதப்பட்ட நிலையில் காயம் காரணமாக இந்த சீசனில் மீதமிருந்த போட்டிகளில் விளையாட வில்லை. மேலும் இளம் வயதில் இருந்தே அவருக்கு காயம் ஒரு தடையாக இருப்பதால் அவரால் இந்திய அணிக்கு தொடர்ச்சியாக பந்து வீச முடியுமா? என்ற கேள்வி எழும்பியது. இந்த சூழ்நிலையில் என்சிஏவில் சேர்க்கப்பட்ட மயங்க் யாதவ் தனது காயத்திற்கு தகுந்த பயிற்சிகளை மேற்கொண்டு தற்போது ஒரு நாளைக்கு 15 ஓவர்கள் வரை வீசி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கு முக்கிய காரணமாக விவிஎஸ் லக்ஷ்மன் திகழ்கிறார் என்று அவரது பயிற்சியாளர் தேவேந்தர் சர்மா பாராட்டியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இதில் எல்லாப் புகழும் லக்ஷ்மன் சாருக்கே சேரும். மயாங்க் என்சிஏவில் சேர்ந்ததிலிருந்து அவர் மீது அதிக அக்கறை காட்டினார். லக்ஷ்மன் சார் மூலம் மயாங்கிற்க்கு தெளிவான அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. முதலில் அவரது பலத்திற்கு வேலை செய்ய தொடங்கிய பின்னர் பந்துவீச்சை தொடங்குங்கள் என்று அறிவுரை வழங்கி இருக்கிறார்.
மேலும் அவருக்கு இளம் வயதில் இருந்தே காயம் குறித்த பிரச்சனை இருப்பதால் பிசிசிஐ அவர் மீது அதிக அழுத்தம் கொடுக்காமல் மெதுவான செயல்முறையை தொடங்கியது. அவர் இரண்டு மாதங்களுக்கு முன்பே பந்து வீசத் தொடங்கியதில் இருந்து ஒரு மாதத்திற்கு முன்னதாக தனது இயல்பு நிலைக்கு மாறி இருக்கிறார். கடந்த ஒரு வாரமாக அவர் என்சிஏவில் ஒரு நாளைக்கு 15 ஓவர்கள் வரை பந்து வீசி வருகிறார். இதுவும் லக்ஷ்மன் சாரால் வழங்கப்பட்ட அறிவுரை ஆகும்” என்று கூறியிருக்கிறார்.
ஐபிஎல் இதையும் படிங்க:ஐபிஎல் 2025 ஏலம்: 8 விதிகள்.. 120 கோடி.. 6 பேர்.. வெளிநாட்டு வீரர்களுக்கு புது தடை.. முழு பட்டியல்
இதன் மூலமாக தற்போது இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிராக விளையாடும் டி20 தொடரில் இவருக்கு இடம் கிடைத்திருக்கிறது. எனவே இந்த தொடரில் சிறப்பாக செயல்படுவதன் மூலமாக இந்திய எதிர்காலத்தின் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குவார் என்று நம்பலாம்.