“கடைசி 4 ஓவர்.. இந்த இந்திய வீரருக்கு உலகத்துல யாராலும் பவுலிங் பண்ண முடியாது” – அஷ்வின் உறுதி

0
1362
Ashwin

இந்திய கிரிக்கெட்டில் சயின்டிஸ்ட் என்று எல்லோராலும் மதிப்புடன் அழைக்கப்படக்கூடிய வீரர் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின்.

இந்திய அணி மற்றும் ஐபிஎல் தொடரில் தற்காலத்தில் விளையாடக்கூடிய வீரராக இருந்தாலும், அவர் உலகம் முழுவதும் நடக்கும் கிரிக்கெட் தொடர்கள், அதில் மிகச் சிறப்பாக விளையாடும் வீரர்கள் என்று எல்லாமே தெரிந்து வைத்திருப்பார்.

- Advertisement -

மேலும் ஆடுகளங்கள் குறித்தும், அதற்கு ஏற்றவாறு பந்து வீசும் முறைகள் குறித்தும், தனிப்பட்ட வீரர்களின் பலம் மற்றும் பலவீனம் குறித்தும், அவருக்கு என ஒரு தனி பார்வையும் கருத்தும் எப்பொழுதும் இருக்கும். கிரிக்கெட் தாண்டி மற்ற விஷயங்களிலும் அவர் நேரம் செலவிடுவார்.

இதன் காரணமாக அவர் தன்னுடன் விளையாடும் இந்திய அணி வீரர்களின் சிறப்பு குறித்து எங்காவது ஒரு இடத்தில் யாருக்கும் தெரியாத விஷயங்களை பதிவு செய்வார். அவர் கூறும் அந்த விஷயங்கள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் பரவசத்தையும் உண்டாக்கக்கூடிய விஷயமாக இருக்கும்.

இந்த வகையில் அவர் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா எவ்வளவு அதிரடியான வீரர் என்பது குறித்து விராட் கோலி தன்னிடம் பேசி வியந்து இருக்கிறார் என்று முன்பு கூறியிருந்தார். இப்பொழுது ரோகித் சர்மா ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்த பிறகு, இந்தக் கருத்தை மீண்டும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது சம்பந்தமாக அவர் பேசும் பொழுது “போட்டியின் முக்கிய பாயிண்ட் ரோஹித் சர்மாவின் இன்னிங்ஸ்தான். 22 ரன்களுக்கு நான்கு விக்கெட் என்று இருந்த பொழுது, சூழ்நிலைக்கு தகுந்தவாறு அவர் வளைந்து கொடுத்து, கடைசிக்கட்டத்தில் அதிரடியில் மிரட்டி விட்டார். நான் ஏற்கனவே சொன்னதுதான், கடைசி நான்கு ஓவர்களில் ரோகித் சர்மாவுக்கு எதிராக உலகத்தில் யாராலும் பந்து வீச முடியாது.

நீங்கள் அவருக்கு லென்த் பந்தை வீசினால் புல் ஷாட் அடிப்பார், நீங்கள் பந்தை நேராக அவர் உடம்பிற்குள் அப்படியே வைத்தால், பிக்கப் புல் ஷாட் அடிப்பார், நீங்கள் பந்தை கொஞ்சம் வெளியில் காட்டினால், கவருக்கு மேல் சிக்சர் அடிப்பார், உங்கள் யார்க்கர் தவறினால் அதுவும் சிக்சர்தான். இந்த முறை அவர் சூப்பர் ஓவரில் சிக்ஸர்கள் அடித்திருப்பதற்கு முன்பே, நியூசிலாந்துக்கு எதிராக அவர்களது நாட்டில் சவுதிக்கு எதிராக சிக்சர்கள் அடித்து இந்திய அணியை வெல்ல வைத்தார்.

ரோகித் சர்மா தான் ஏன் பாஸ்? என்பதை மீண்டும் நிரூபித்தார். அவர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் எப்படி விளையாடினாரோ அப்படியே மீண்டும் வந்தார். இந்த தொடரில் அவர் இரண்டு முறை டக் அவுட் ஆனார். ஒருமுறை ரன் அவுட், இன்னொரு முறை அனிக்காக இன்டெண்ட் காட்டி அவுட். மூன்றாவது போட்டியில் திரும்ப வந்து சதம் அடித்து விட்டார்” என்று கூறியிருக்கிறார்.