தோனிக்கு எப்படிப்பட்ட திட்டமும் எடுபடாது; கடைசி 2 ஓவர்கள் செம்ம டென்சன் பண்ணீட்டாரு, தோனி உள்ள இருக்கவரைக்கும் எந்த ஸ்கோரும் பாதுகாப்பு கிடையாது – சஞ்சு சாம்சன்!

0
730

கடைசி இரண்டு ஓவர் உச்சகட்ட டென்ஷனில் இருந்தேன். தோனி முன்பு எந்தவித திட்டமும் ஈடுபடாது என்று பேசி உள்ளார் சஞ்சு சாம்சன்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் அடித்தது.

- Advertisement -

இந்த இலக்கை துரத்திய சிஎஸ்கே அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. ரஹானே 31 ரன்கள் அடித்து அவுட் ஆகினார். அடுத்து வந்த வீரர்கள் சொற்பரன்களுக்கு ஆட்டமிழக்க சிஎஸ்கே அணி சற்று தடுமாற்றம் கண்டது.

களத்தில் நின்று போராடி வந்த டெவான் கான்வெ, அரைசதம் அடித்த அடுத்த பந்திலே அவுட் ஆனார். இதனால் சிஎஸ்கே அணிக்கு தேவையான ரன்ரேட் மிகவும் உயரத்திற்கு சென்றது. கடைசி மூன்று ஓவர்களில் 54 ரன்கள் தேவைப்பட்டபோது, களத்தில் ஜோடி சேர்ந்த ஜடேஜா மற்றும் தோனி இருவரும் சிக்சர் மற்றும் பவுண்டரிகளாக விளாசி நம்பிக்கை கொடுத்தனர்.

கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் இரண்டு ஒய்டுகள் வீசப்பட்டது. இதனால் டென்ஷன் ராஜஸ்தான் பக்கம் அதிகமாக இருந்ததை காணமுடிந்தது. அதற்கு அடுத்ததாக அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை விளாசிய தோனி, ராஜஸ்தானின் நம்பிக்கையை சீர்குலைத்தார்.

- Advertisement -

கடைசி ஒரு பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டபோது, சிறப்பான யார்க்கர் வீசி சந்திப் சர்மா கட்டுப்படுத்தியதால் டென்ஷன் நிறைந்த இந்த மேட்சில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த சஞ்சு சாம்சன்,

“முழுக்க முழுக்க அணியின் வீரர்களுக்கு பாராட்டுக்கள் சென்றாக வேண்டும். பவுலர்கள் எந்தவித அழுத்தமும் எடுக்காமல் சிறப்பாக பந்து வீசினார்கள். கேட்ச்கள் தவறாமல் எடுக்கப்பட்டது. இது ராஜஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தனிப்பட்ட முறையில் எனக்கு ரெக்கார்டுகள் மிகவும் மோசமாக இருக்கின்றன. முதல்முறையாக இந்த மைதானத்தில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பவர்-பிளே ஓவர்கள் மற்றும் மிடில் ஓவர்கள் எங்களுக்கு மிகச்சிறப்பாக அமைந்தது.

கடைசி இரண்டு ஓவர்கள் டென்ஷன் உச்சத்தில் இருந்தது. தோனி களத்தில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. கடைசி வரை எடுத்துச் சென்று அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மட்டுமே நினைத்தேன். நடுவில் எங்களிடமிருந்து ஆட்டத்தை எடுத்துவிட்டார். தோனி எப்படிப்பட்டவர் என்று தெரியும் அவருக்கு உரிய மரியாதை கொடுத்து விட வேண்டும். எந்த பிளானும் அவருக்கு எடுபடாது. கடைசியில் சந்திப் சர்மா மிகச்சரியாக பிளானை வெளிப்படுத்தியதுதான் எங்களுக்கு வெற்றியை கொடுத்திருக்கிறது.” என்றார்.