நடப்பு 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி மிகவும் விறுவிறுப்பாக மும்பை மைதானத்தில் நடந்து வருகிறது.
இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி பேட்டிங் செய்கிறது. கடந்த ஐந்து போட்டிகளாக விளையாடிய அதே வீரர்களைக் கொண்ட அணியே இந்த முறையும் இந்தியாவுக்கு களமிறங்கியது.
இந்த உலகக் கோப்பை தொடர் முழுக்க அதிரடியான துவக்கம் தருவதை வாடிக்கையாக வைத்திருக்கும் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் அதையே செய்து, 29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதற்கு அடுத்து ரோகித் சர்மா விட்டதை தொடர்ந்த இளம் வீரர் கில் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து, 65 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து தசைப்பிடிப்பு காரணமாக வெளியேறி இருக்கிறார்.
இதற்கு அடுத்து ஸ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து பொறுப்பை எடுத்துக் கொண்டு விராட் கோலி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார்.
இதன் மூலம் நடப்பு உலகக் கோப்பை தொடரில் 50க்கும் மேற்பட்ட ரன்களை 8 முறை அடித்திருக்கிறார். இது ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக முறை ஐம்பது ரன்களுக்கு மேல் அடித்த வகையில் உலகச் சாதனையாக அமைந்தது. இதற்கு முன்பாக 2003 ஆம் ஆண்டு சச்சின் 7 முறையும், 2019 ஆம் ஆண்டு சஹிப் அல் ஹசன் 7 முறையும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் அடித்திருக்கிறார்கள்.
மேலும் விராட் கோலி சச்சினின் இன்னொரு சாதனையும் முறியடித்து இருக்கிறார். ஒரு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனை சச்சின் வசம் இருந்தது. தற்பொழுது அந்த சாதனை விராட் கோலி வசம் வந்திருக்கிறது.
விராட் கோலி 10 இன்னிங்ஸ் 674 ரன்கள் 2023
சச்சின் 11 இன்னிங்ஸ் 673 ரன்கள் 2003
மேத்யூ ஹைடன் 10 இன்னிங்ஸ் 659 ரன்கள் 2007
ரோகித் சர்மா 9 இன்னிங்ஸ் 648 ரன்கள் 2019
டேவிட் வார்னர் 10 இன்னிங்ஸ் 647 ரன்கள் 2019
இதற்கு அடுத்து மிக முக்கியமாகச் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக அடித்திருந்த 49 சதங்களை சமன் செய்திருந்த விராட் கோலி, இந்தப் போட்டியில் சதம் அடித்ததின் மூலம் 50வது ஒருநாள் கிரிக்கெட் சதத்தை அடித்து தாண்டி இருக்கிறார்.
இன்றைய ஒரே நாளில் மட்டும் விராட் கோலி சச்சினின் மூன்று மெகா சாதனைகளை முறியடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!