கேஎல் ராகுல் அல்லது ரிஷப் பண்ட்.. பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்கு யார் கேப்டன்? – ரிப்போர்ட்!

0
982

வங்கதேச அணியுடன் நடக்கும் டெஸ்ட் தொடருக்கு யார் இந்திய அணியின் கேப்டனாக இருக்கப் போகிறார்கள் என்ற தகவல்கள் தற்போது வந்திருக்கிறது.

வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி கடந்த டிசம்பர் நான்காம் தேதி முதல் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி ஒரு விக்கெட் மற்றும் ஐந்து ரன்கள் வித்தியாசங்கள் முறையே முதல் மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டிகளில் தோல்வியை தழுவியது.

- Advertisement -

ஆகையால் 0-2 என்ற கணக்கில் வங்கதேச அணி தொடரை கைப்பற்றி விட்டது. அடுத்ததாக மூன்றாவது ஒருநாள் போட்டி டாக்கா மைதானத்தில் வருகிற டிசம்பர் 10ஆம் தேதி நடக்க உள்ளது.

இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது பீல்டிங் செய்து கொண்டிருந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் கையில் பந்து வேகமாக பட்டதால் அவரது கட்டைவிரலில் படுகாயம் ஏற்பட்டது.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை பரிசோதித்துப் பார்த்ததில் கட்டை விரல் பக்கம் இருக்கும் எலும்பு சற்று விலகி இருப்பதாக ஸ்கேன் மூலம் தெரிந்திருக்கிறது. ஆகையால் உடல் நலம் கருதி மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இந்தியாவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

டெஸ்ட் போட்டிகளிலும் அவர் பங்கேற்க மாட்டார் என்ற தகவல்கள் தற்போது வந்திருக்கிறது. அவர் குணமடைவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வார காலம் ஆகும் என்பதால் அணி நிர்வாகத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறிய ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளுக்கு மீண்டும் அணிக்குள் வருகிறார். காயத்தினால் வெளியேறிய முகமது சமி டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்பதால் அவருக்கு மாற்று வீரராக உம்ரான் மாலிக் அல்லது முகேஷ் குமார் இருவரில் ஒருவர் உள்ளே எடுத்து வரப்படலாம் என்ற தகவல்கள் வந்திருக்கின்றன.

ரோகித் சர்மா இல்லாத நேரத்தில் யார் டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக வருவார்? என தொடர்ந்து கேள்விகள் எழுந்து வந்தது. இந்நிலையில் ரிஷப் பன்ட் அல்லது கே எல் ராகுல் இருவரில் ஒருவர் கேப்டன் பொறுப்பேற்று விளையாடலாம். கேஎல் ராகுல் துணை கேப்டனாக இருப்பதால் அவரை கேப்டனாக பொறுப்பேற்று விளையாட வைக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிகிறது.