இந்தியாவில் தற்பொழுது நடந்து முடிந்திருக்கும் ஐபிஎல் தொடரில் கிரிக்கெட் வர்ணனையாளராக பங்கேற்ற அம்பதி ராயுடுவை சுற்றி நிறைய சுவாரசியமான விஷயங்களும் விமர்சனங்களும் சென்று கொண்டிருக்கிறது. கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டிக்கு பிறகு நேற்று அப்படியான ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது.
அம்பதி ராயுடு ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக ஆரம்பித்து இறுதியாக சிஎஸ்கே அணிக்காக முடித்துக் கொண்டார். மொத்தம் ஆறு ஐபிஎல் தொடர்களை இரண்டு அணிகளும் வென்ற பொழுது இவர் இரண்டு அணியிலும் இருந்திருக்கிறார்.
இவர் கிரிக்கெட் வர்ணனையில் ஆர்சிபி அணியின் தொடர் தோல்விகள் குறித்து ஆரம்பத்தில் இருந்து பேசி வந்தார். மேலும் லீக் சுற்றில் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய போட்டிக்கு பிறகு, சில சர்ச்சையான சம்பவங்கள் நடைபெற்றது. இதன்பிறகு நேரடியாகவே ஆர்சிபி மற்றும் விராட் கோலியை அம்பதி ராயுடு விமர்சனம் செய்தார்.
இந்த நிலையில் நேற்று ஐபிஎல் இறுதிப் போட்டியில் அம்பதி ராயுடு தனது மாநில அணியான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ஆதரித்தார். இந்த ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக அவர் ஆரஞ்சு நிற கோட் ஒன்றை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் வர்ணனையில் இருந்த கெவின் பீட்டர்சன் கொல்கத்தா அணியை ஆதரித்து ஊதா நிற கோட் அணிந்திருந்தார்.
ஆனால் இறுதிப் போட்டியில் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தவுடன், அம்பதி ராயுடு தான் அணிந்திருந்த ஆரஞ்சு நிற கோட்-டை கழட்டிவிட்டு, கொல்கத்தா அணியின் நிறமான ஊதா நிற கோட்-டை அணிந்து கொண்டு மைதானத்திற்கு கிரிக்கெட் வர்ணனை செய்வதற்காக வந்தார்.
இதையும் படிங்க : ரோகித் படை இப்ப சாக்கு சொல்லவே முடியாது.. இந்த காரணத்தால சரியா சிக்கிட்டாங்க – வாசிம் அக்ரம் பேட்டி
இதை சரியாக பிடித்துக் கொண்ட கெவின் பீட்டர்சன் அவரிடம் நேரடியாகவே ” அம்பதி ராயுடு நீங்கள் ஒரு ஜோக்கர் எப்பொழுதும் ஜோக்கர். நான் குறைந்தபட்சம் கொல்கத்தா அணியை ஆதரித்தேன். அதன் காரணமாக இறுதிவரை அந்த அணியின் நிற கோட்-டை அணிந்து கொண்டிருக்கிறேன்” என்று கூறினார். இதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்ட அம்பதி ராயுடு ” இல்லை இல்லை நான் இரு அணிகளையுமே ஆதரிக்கிறேன் பொதுவாக இருக்கிறேன்” என்று கூறி அந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். தற்பொழுது ரசிகர்களால் இது சமூக வலைதளத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.