ஒருநாள் தொடரிலிருந்து முக்கிய வீரர் விலகல்… தொடர் துவங்குவதற்கு முன்பே அணிக்கு நேர்ந்த சோகம்!

0
1074

ஆஸ்திரேலியா அணி வீரர் ஜெய் ரிச்சர்ட்சன், காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில், மூன்று போட்டிகள் முடிவடைந்துவிட்டன. நான்காவது டெஸ்ட் போட்டி வருகிற மார்ச் ஒன்பதாம் தேதி அகமதாபாத் மைதானத்தில் துவங்குகிறது.

- Advertisement -

அதன் பிறகு மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவிருக்கிறது. இதில் பங்கிருக்கும் இரு அணி வீரர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டன.

டெஸ்ட் தொடரின்போது ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சிலர் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தனர். ஆகையால் முதல் 2 டெஸ்டில் சிறந்த பிளேயிங் லெவனை எடுக்க முடியாமல் திணறி வந்தனர்.

இதற்கிடையில் கேப்டன் பாட் கம்மின்ஸ், சொந்த காரணங்களுக்காக நாடு திரும்பியிருப்பதால் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடமாட்டார் என்றும் கூறப்பட்டது. ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பொறுப்பு ஏற்று விளையாடுகிறார்.

- Advertisement -

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த மிச்சல் ஸ்டார்க் மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்பிவிட்டனர். ஆகையால், ஒருநாள் தொடரிலும் இவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

காயத்தால் முன்னணி வீரர்கள் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி அவதிப்பட்டு வரும் நிலையில், அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜெய் ரிச்சர்ட்சன் காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

Jhye Richardson

உள்ளூர் போட்டிகளில் விளையாடி மிகச்சிறந்த பார்மில் இருந்த ரிச்சர்ட்சன், ஒருநாள் தொடருக்காக ஆஸ்திரேலியாவில் பயிற்சிகள் மேற்கொண்டு வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலில் உள்ள தசை பகுதியில் சற்று அசவுகரியமாக இருப்பதை தெரிவித்துள்ளார். உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.

இவரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் குணமடைவதற்கு குறைந்தது இரண்டு வார காலம் ஆகும் என தெரிவித்தனர். ஆகையால் மார்ச் 6ஆம் தேதி ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஜெய் ரிச்சர்ட்சன் நீக்கப்படுகிறார். அவரது காயம் காரணமாக இத்தகைய முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. விரைவில் மாற்று வீரர்கள் குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியாகும் என்றனர்.

இந்த வருடம் ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாட மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இரண்டு வாரத்தில் அவரது உடல் நிலை குணமாகிவிடும் என்றாலும், முழுமையான உடல்நிலையுடன் போட்டிகளில் ஆடுவதற்கு இன்னும் கால அவகாசம் எடுக்கும். அதுவரை ஆஸ்திரேலியாலில் கண்காணிப்பில் இருப்பார். ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டிருக்கிறது. இவர் ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.