மனதளவில் என்னை பாதித்துவிட்டது…ஒரே வருஷத்துல 3 முறை இஞ்சுரி ஆனதுக்கு அப்புறமும் விளையாடுவது ஈஸி கிடையாது – தீபக் சஹர் பேட்டி!

0
532

ஒரு வருடத்தில் மூன்று முறை காயம் ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வந்து பவுலிங் செய்வது என்பது மனதளவில் அவ்வளவு எளிதல்ல என்று உருக்கமாக பேசியுள்ளார் தீபக் சஹர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக இருந்து வரும் தீபக் சஹர் கடந்த ஆண்டு முழுவதும் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தார். ஓரிரு போட்டிகள் தவிர மற்ற போட்டிகள் அனைத்திலும் இவர் விளையாடவில்லை.

- Advertisement -

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டு கிரிக்கெட்டில் இருந்து வெளியேறினார். ஆசியகோப்பை முடிந்தபின் நடந்த போட்டிகளில் மீண்டும் விளையாடினார். பும்ரா இல்லாததால் டி20 உலககோப்பை இந்திய அணியிலும் இடம் பிடித்தார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது மீண்டும் காயம் ஏற்பட்டு முதுகு பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். கடந்த டிசம்பர் மாதம் வங்கதேசம் அணிக்கு எதிரான தொடருக்கு திரும்பிய தீபக் சஹர் மூன்றாம் நிலை ஜவ்வு கிழிந்து கிரிக்கெட்டில் இருந்து மீண்டும் சில காலம் வெளியேறும்படி நிர்பந்திக்கப்பட்டார்.

இதனால் கடந்த ஆண்டு ஐபிஎல், ஆசியகோப்பை, டி20 உலககோப்பை என மிகப்பெரிய தொடர்கள் எதிலும் இவர் விளையாட முடியவில்லை. அதிலிருந்து குணமடைந்து இந்த சீசன் சிஎஸ்கே அணிக்காக மீண்டும் பந்துவீசுவதற்கு வந்திருக்கிறார்.

- Advertisement -

இந்த சீசனின் முதல் போட்டியில் 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இவரது பந்துவீச்சு படுமோசமாக இருந்தது. நான்கு ஓவர்களில் 55 ரன்கள் விட்டுக்கொடுத்தார். நிறைய ஒயிடுகள் வீசினார். இவர் மீது கேப்டன் தோனி கோபம் அடைந்ததையும் பார்க்க முடிந்தது.

போட்டி முடிந்த பிறகு காயம் குறித்தும், அதனால் இயல்பான பந்துவீச்சை வெளிப்படுத்த முடியாதது குறித்தும் வருத்தத்துடன் பேசி இருக்கிறார்.

“காயத்திலிருந்து குணமடைந்துவிட்டாலும் மனதளவில் அதிலிருந்து வெளியே வருவது மிகவும் கடினம். கடந்த ஆண்டு எனக்கு இரண்டு மேஜர் இஞ்சுரிகள் ஏற்பட்டது. குறிப்பாக முதுகு பகுதியில் எலும்பு முறிவும் ஏற்பட்டது. வேகப்பந்துவீச்சாளருக்கு எப்படி நேர்ந்தால் அதைவிட மிகப்பெரிய வலி எதுவும் இருக்கமுடியாது. அதிலிருந்து குணமடைந்துவிட்டாலும் உடல் அளவில் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறேன். சிறிது காலம் மீண்டு வருவதற்கு எடுக்கும். அதேபோல் மனதளவிலும் இதிலிருந்து மீண்டு வருவது சற்று கடினமாகவே இருக்கிறது. விரைவில் மீண்டு வருவேன்.” என்றார்.