இந்த ஆண்டு இன்னும் ஐந்து மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் வைத்து நடக்க இருக்கிறது.
தற்போது டி20 உலக கோப்பை முடிந்து உலகின் பிரதான அணிகள் அனைத்தும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான அணித் தயாரிப்பில் பரபரப்பாக ஈடுபட்டுள்ளன.
தற்பொழுது இந்தியாவில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் மிகவும் பிரபலமான ஐபிஎல் தொடர் நடைபெறும். இந்தத் தொடரில் இருந்து உலகக் கோப்பைக்கு வீரர்கள் இந்திய அணிக்கு கிடைப்பார்களா என்பது கேள்விக்குறிதான். ஏனென்றால் ஏற்கனவே இந்த உலகக் கோப்பைக்கான அணி தயாரிக்கப்பட்டு வருகிறது.
நேற்று ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு எதிராக தமிழகத்தைச் சேர்ந்த மிஸ்டரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி நான்கு ஓவர்கள் பந்துவீசி 15 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கட்டுகளை கைப்பற்றினார்.
தற்பொழுது இவரது இந்த செயல்பாட்டை வைத்து இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் சில முக்கியமான கருத்தை, வரவிருக்கின்ற 50 ஓவர் உலகக் கோப்பையை மனதில் வைத்து கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக சேவாக் கூறும்பொழுது
” வருண் சக்கரவர்த்தியிடம் வழக்கமான ரிஸ்ட் ஸ்பின்னர்கள் இடம் இருக்கும் பேட்ஸ்மேனுக்கு வெளியே செல்லும் டெலிவரிகள் இல்லை. அவர் டாப் ஸ்பின் மற்றும் கூக்ளிகளை அதிகம் நம்பி இருக்கிறார். ஆர்சிபி பேட்டர்கள் அவரை சரியாக விளையாடவில்லை. அவரைத் தொடர்ந்து தவறாக விளையாடினார்கள். வரும் சக்கரவர்த்திக்கு இந்த ஐபிஎல் சீசன் மிகச் சிறப்பாக அமைந்தால் அவர் வருகின்ற ஒருநாள் போட்டி உலகக்கோப்பைக்கான போட்டியாளர்களில் ஒருவராக இருப்பார்!” என்று கூறியுள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர்
“வருண் மற்றும் நரைன் இருவரும் மிகவும் சிக்கனமாக பந்து வீசிய காரணத்தால் ஆர்.சி.பி பேட்டர்கள் புதிய இளம் பந்துவீச்சாளர் சுயாஸ் சர்மா பந்துவீச்சை அடித்து ஆட வேண்டிய தேவை இருந்தது. இதனால் அவர்கள் அவரிடம் போனார்கள். அவருக்கு மூன்று விக்கட்டுகளும் கிடைத்தது. 70 ஆயிரம் மக்களுக்கு முன்னால் மிகப்பெரிய மேடையில் தனது முதல் வாய்ப்பில் அவர் மிகச் சிறப்பாக பந்து வீசினார் என்று கூறியிருக்கிறார்!