நடப்பு ஒன்பதாவது டி20 உலக கோப்பை குறித்து இருந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் வேறு மாதிரி மாறிக்கொண்டிருக்கின்றன. ஆடுகளங்கள் பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருக்கின்றன. இந்த நிலையில் இந்திய அணியின் அணுகுமுறை எப்படி இருக்கும்? என்பது குறித்து இர்பான் பதான் பேசி இருக்கிறார்.
கடந்த முறை 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக, ஆஸ்திரேலியாவில் தட்டையான ஆடுகளங்கள் கொடுக்கப்படும் எனவே பேட்ஸ்மேன்கள் நிறைய ரன்கள் எடுப்பார்கள், அங்கு உள்நாட்டு டி20 லீக்குகளில் அப்படியான ஆடுகளங்கள் தரப்படுகிறது என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் மிகச் சிறப்பான ஆடுகளங்கள் கொடுக்கப்பட்டன. பேட்ஸ்மேன்களை விட பந்துவீச்சாளர்களுக்கு கொஞ்சம் கூடுதல் சாதகம் இருந்தது. இதனால் இதுவரையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைகளில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.
தற்போது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடந்து வரும் டி20 உலகக் கோப்பை தொடரிலும் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சாதகங்கள் இல்லை. நேற்று தென்னாபிரிக்க அணிக்கு எதிராக ஆடுகளத்தை புரிந்து கொள்ளாமல் இலங்கை வேகமாக ரன்கள் எடுக்க முயற்சி செய்த காரணத்தினால் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இர்பான் பதான் பேசும் பொழுது “இப்படியான நிலைமைகளில் குறிப்பிட்ட ஆடுகளங்களில் வெற்றிக்கான ரன்கள் எதுவாக இருக்கும் என தீர்மானிப்பதில் விராட் கோலிக்கு பெரிய பங்கு இருக்கும். இந்தியா ஒவ்வொரு ஆட்டத்திலும் 140 முதல் 150 ரன்கள் எடுக்க முயற்சி செய்யும். மேலும் 200, 210 ரன்கள் எடுப்பதற்கு முயற்சி செய்யாது. பெரிய ரன்கள் எடுத்தால் மகிழ்ச்சிதான். ஆனால் முதலில் 150 ரன்கள் கடக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள்.
இதையும் படிங்க : பாகிஸ்தான் போட்டிக்கு இந்திய அணிக்கு உருவான புது சிக்கல்.. ரோகித் படை சமாளிக்குமா?
உலகக் கோப்பையில் உங்களுக்கு அனுபவம் தேவை. குறிப்பாக பந்து வெளியில் நகரும் நிலையில் விராட் கோலி ரோஹித் சர்மா போன்ற பெரிய வீரர்கள் இருக்க வேண்டும். இவர்கள் பெரிய மேடையில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் ஸ்ட்ரைக் ரேட் பற்றி பார்க்காமல் அணி போட்டியில் வெல்வது குறித்து யோசிக்கிறார்கள். அவர்கள் 120 முதல் 150 ஸ்ட்ரைக் ரேட்டில் இருந்தாலும் அது குறித்து கவலைப்படுவதில்லை” என்று கூறியிருக்கிறார்