சிவம் துபே ரசலை பின் தள்ளி சிக்ஸரில் சாதனை. சிஎஸ்கே கடைசி 8 ஓவர்கள் 60 ரன்கள்.. ஹைதராபாத் அசத்தல் பந்துவீச்சு

0
153
Dhoni

நடப்பு 17ஆவது ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி, இன்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

சிஎஸ்கே அணியின் தரப்பில் மதிஷா பதிரனா, முஸ்தஃபீஸூர் ரஹ்மான் மற்றும் சமீர் ரிஸ்வி மூவரும் இடம் பெறவில்லை. இவர்களுக்கு பதிலாக மொயின் அலி, முகேஷ் சௌத்ரி, மதிஷா தீக்சனா ஆகியோர் இடம் பெற்றார்கள். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தரப்பில் உம்ரான் மாலிக் இடத்தில் நடராஜன் காயத்தில் இருந்து மீண்டு வந்திருக்கிறார்.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு, முதல் விக்கெட்டுக்கு 25 ரன்கள் பார்ட்னர்ஷிப் வந்த பொழுது, புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் ரச்சின் ரவீந்திரா 9 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து 54 ரன்கள் சிஎஸ்கே அணி எடுத்திருந்தபோது கேப்டன் ருதுராஜ் 21 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உடன் 26 ரன்களில் ஷாபாஷ் அகமது பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து சிஎஸ்கே அணியின் அதிரடி வீரர் சிவம் துபே உள்ளே வந்து, வழக்கம்போல் சுழல் பந்துவீச்சாளர்களை அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். நடராஜனின் பந்துவீச்சில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். ரகானே உடன் இணைந்து 39 பந்துகளில் 65 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்து, 24 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 45 ரன்கள் எடுத்து கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து ரகானே 30 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உடன் 35 ரன்கள், டேரில் மிட்சல் 1 பவுண்டரி உடன் 10 பந்தில் 13 ரன்கள் எடுத்தார்கள். இன்று மொயின் அலிக்கு முன்கூட்டியே அனுப்பப்பட்ட ரவீந்திர ஜடேஜா 23 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள், தோனி 2 பந்தில் 1 ரன் ஆட்டம் இழக்காமல் எடுத்தார்கள். 20 ஓவர்களில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. இன்று ஆடுகளம் மிகவும் மெதுவாக அமைந்திருந்ததால் பேட்ஸ்மேன்களால் ரன்கள் அடிக்க முடியவில்லை. உலகக் கோப்பை இறுதிப்போட்டியை ஞாபகப்படுத்துவது போல இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : 300 ரன் அடிக்கிற பிட்ச் போடுறது நியாயமா.. நாங்க பாவம் இல்லையா.. இந்த மனநிலை மாறனும் – தீபக் சகர் பேட்டி

இன்றைய போட்டியில் கடைசி எட்டு ஓவர்களில் சிஎஸ்கே அணி 60 ரன்கள் மட்டுமே எடுத்தது. மேலும் இந்த போட்டியில் நான்கு சிக்ஸர்கள் அடித்ததின் மூலமாக சிவம் துபே 2022ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார். சிவம் துபாய் 61 சிக்ஸர்கள் அடித்திருக்க, ரசல் 60 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார்.