நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி இன்று சூப்பர் 8 சுற்றில் தங்கள் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. போட்டியின் முடிவுக்கு பிறகு வெற்றிக்கான காரணங்கள் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியிருக்கிறார்.
இன்றைய போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று தைரியமாக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் துவக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இடம் இருந்து ரன்கள் வரவில்லை. அதே சமயத்தில் சூரியகுமார் யாதவ் 28 பந்தில் 53 ரன், ஹர்திக் பாண்டியா 24 பந்தில் 32 ரன்கள் எடுத்தார்கள்.
இந்திய அணி விக்கெட்டுகளை இழந்த போதும் ரன்கள் அடிக்கின்ற நோக்கத்தை கைவிடாமல் தொடர்ந்து அதிரடியாக விளையாடியது. இதன் காரணமாக இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. குறிப்பிட்ட ஆடுகளத்தில் போராடுவதற்கு இது சரியான ரன்களாகவே தெரிந்தது.
இதற்கு அடுத்து ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசையில் குர்பாஸ் விக்கெட்டை வீழ்த்தி பும்ரா முதல் ஓட்டையைப் போட்டார். அடுத்து வந்த அக்சர் படேல் இப்ராகிம் ஜட்ரன் விக்கெட்டை வீழ்த்தினார். தொடர்ந்து வந்த பும்ரா இப்ராகிம் ஜென்ரல் விக்கெட்டை கைப்பற்ற, பவர் பிளேவிலேயே இந்திய அணியின் கையில் போட்டி வந்துவிட்டது. முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 134 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகி 47 ரன் வித்தியாசத்தில் தோற்றது.
வெற்றிக்குப் பின் பேசிய கேப்டன் ரோகித் சர்மா “கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் இங்கு வந்து சில டி20 போட்டிகள் விளையாடி இருக்கிறோம். நாங்கள் கொஞ்சம் நன்றாக திட்டமிட்டு இங்குள்ள கண்டிஷனுக்கு பொருந்தினோம்.இந்த டோட்டலை எங்கள் பவுலிங் யூனிட்டின் கிளாஸ் காப்பாற்றும் என்று எனக்குத் தெரியும். எல்லோரும் வந்து அவர்களுக்கான வேலையை செய்கிறார்கள். சூர்யா மற்றும் ஹர்திக் கூட்டணி கடைசியில் சிறப்பாக இருந்தது.
இதையும் படிங்க : ஹர்திக் உள்ளே வந்ததும் இதைத்தான் சொன்னேன்.. பவுலருக்கே அதை குடுங்க கவலை இல்ல – சூரியகுமார் யாதவ் பேட்டி
பும்ரா எங்களுக்காக என்ன செய்ய முடியும் என்று எங்களுக்கு தெரியும். அவரை நான் பொறுப்பாக பயன்படுத்த வேண்டியது முக்கியம். அவர் பொறுப்பை ஏற்க தயாராக இருக்கிறார். எந்த இடத்தில் பொறுப்பை கொடுத்தாலும் அவரால் செய்ய முடியும். ஒரு கேப்டனாக நான் கண்டிஷன் எப்படி இருக்கிறது என்று மதிப்பிட வேண்டும். எதிரணியை பார்த்து காம்பினேஷனை மாற்றுவோம். இன்று மூன்று ஸ்பின்னர்கள் உடன் செல்ல வேண்டும் என்று வந்தோம். தேவைப்பட்டால் மூன்று வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து விளையாட தயாராக இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.