இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளரான பரிந்தர் ஸ்ரான் சர்வதேச கிரிக்கெட் மற்றும் அனைத்து வகையான கிரிக்கெட் தொடர்களில் இருந்தும் தனது ஓய்வினை அறிவித்திருக்கிறார்.
இவர் ஓய்வு பெறும் நிலையில் 2016ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் 1000 ரன்கள் மற்றும் ஆர்சிபி அணியின் ஐபிஎல் கோப்பை வாய்ப்பையும் தட்டிப் பறித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
குத்துச்சண்டை வீரரான பரிந்தர் ஸ்ரான் 2009ஆம் ஆண்டு குத்துச்சண்டையில் இருந்து கிரிக்கெட்டுக்கு மாறினார். இவரது திறமையை அறிந்த இந்திய கிரிக்கெட் வாரியம் 2016ஆம் ஆண்டு இவரை இந்திய அணியில் எடுக்க, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஜனவரி 12ஆம் தேதி மகேந்திர சிங் தோனியின் கீழ் அறிமுகமானார். அறிமுகப் போட்டியிலேயே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் அதே ஆண்டு ஜூன் 20ஆம் தேதி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமாகி அறிமுக போட்டியிலேயே 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
மேலும் அந்த ஆண்டிலேயே அவரது டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவது முடிவுக்கு வந்தது. திறமையான பந்துவீச்சாளர் ஆன இவர் 2016ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் உச்சகட்ட பார்மில் இருந்த விராட் கோலி 1000 ரன்கள் குவிக்க முடியாமல் போனதற்கும், மேலும் அந்த ஆண்டு ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாததற்கும் இவரது பந்துவீச்சு ஒரு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.
2016ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணியின் விராட் கோலி 35 பந்துகளில் 5 பௌண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்கள் என 54 ரன்களில் விளையாடிக் கொண்டிருந்த போது ஸ்ரானின் பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார்.
140 ரன்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்திருந்த பெங்களூர் அணி விராட் கோலியின் விக்கட்டை ஸ்ரான் வீழ்த்திய நிலையில் அதற்குப் பிறகு மளமளவென விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. அந்த சீசனில் விராட் கோலி 973 ரன்கள் குவித்திருந்தார். இன்னும் சிறிது நேரம் களத்தில் நின்று இருந்தால் 1000 ரன்கள் என்கிற மகத்தான சாதனையை படைத்திருப்பார்.
இதையும் படிங்க:டி20 உகோ பைனல்.. இந்த டெக்னிக் யூஸ் பண்ணி இருந்தா.. சூரியகுமார் கேட்ச் நாட் அவுட்தான் – ஷம்சி பேட்டி
அந்த சாதனை ஸ்ரானின் அந்த ஒரு விக்கெட்டால் தலைகீழாக மாறியது. மேலும் தனது ஓய்வை அறிவித்த ஸ்ரான் தான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய விதம் குறித்தும் மற்றும் தனக்கு கிரிக்கெட்டில் உதவிய பயிற்சியாளர்கள், வாய்ப்பளித்த தேர்வு குழு என அனைவருக்கும் நன்றி தெரிவித்து சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவினை வெளியிட்டு இருக்கிறார்.