2024 துலீப் டிராபியின் ஒரு போட்டியில் பெங்களூரு சின்ன சுவாமி மைதானத்தில் சுப்மன் கில் கேப்டனாக இருக்கும் இந்திய ஏ அணியும், ரிஷப் பண்ட் விளையாடும் இந்திய பி அணியும் மோதிக்கொண்ட போட்டியில் இந்திய பி அணி ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது.
இந்த போட்டியில் முதலில் டாசியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் அணி முதலில் பந்து வீசும் என அறிவித்தார். இந்த போட்டி நடைபெற்ற ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருந்தது. அடுத்தடுத்து இந்திய அணிக்கு சர்வதேச டெஸ்ட் போட்டிகள் இருப்பதால் தொலைநோக்காக இவ்வாறு திட்டமிடப்பட்டு இருந்தது.
முஷீர் கான் கலக்கல்
இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய பி அணி 94 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து விட்டது. இந்த சூழ்நிலையில் முஷீர் கான் அற்புதமாக விளையாடி 181 ரன்கள் எடுக்க இந்திய பி அணி முதல் இன்னிங்ஸில் 321 ரன்கள் குவித்தது. ஆகாஷ் தீப் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்திய ஏ அணிக்கு கேஎல்.ராகுல் 37 மற்றும் மயங்க் அகர்வால் 36 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 231 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. முகேஷ் குமார் மற்றும் நவ்தீப் ஷைனி மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.
ரிஷப் பண்ட் அதிரடி
இந்திய பி அணி 90 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி 184 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ரிஷப் பண்ட் 61, சர்ப்ராஸ் கான் 46 ரன்கள் எடுத்தார்கள். இந்திய ஏ அணிக்கு ஆகாஷ் தீப் ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து 275 ரன்கள் நோக்கி விளையாடிய இந்திய ஏ அணிக்கு மீண்டும் நட்சத்திர வீரர் கில் 21 ரன் மட்டும் எடுத்து ஏமாற்றம் அளித்தார். மேலும் ரியான் பராக் 31 ரன் எடுத்தார். தாக்குப் பிடித்து விளையாடிய கேஎல்.ராகுல் அரைசதம் அடித்து 57 ரன்களில் ஆட்டம் இழந்தார். கடைசியில் அதிரடியாக விளையாடிய ஆகாஷ் தீப் 42 பந்தில் 43 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிங்க : டீமோடு பிளான் போட்ட கேப்டன் கில்.. கூட்டத்தோடு கூட்டமா நுழைந்த எதிரணி ரிஷப் பண்ட் – களத்தில் சுவாரசிய சம்பவம்
இறுதியாக இந்திய ஏ அணி 198 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து இந்திய பி அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் பந்துவீச்சில் யாஸ் தயால் 3, முகேஷ் குமார் நவ்தீப் ஷைனி தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். ஆட்டநாயகனாக 181 ரன்கள் குவித்த முஷீர் கான் தேர்வு செய்யப்பட்டார்.