30 வயதான தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் டி காக், நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையோடு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்.
நடப்பு உலக கோப்பையில் இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில் குயிண்டன் டி காக் அபாரமாக சதம் அடித்தார். மேலும் இன்றைய இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக லக்னோவில் அபாரமாக சதம் அடித்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்துவிட்டு உலகக் கோப்பைக்கு வந்த அவர் தொடர்ச்சியாக இரண்டு சதங்கள் அடித்து அசத்தியிருக்கிறார். இன்று இவர் அடித்த சதத்தின் மூலமாக அற்புதமான துவக்கம் பெற்ற தென் ஆப்பிரிக்கா 311 ரன்கள் சேர்த்தது.
அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி 40.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து பரிதாபமாக 177 மட்டுமே எடுத்து சுருண்டு, 134 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இது ஆஸ்திரேலியா அணிக்கு தொடர்ந்து இரண்டாவது தோல்வியாகும்.
இந்தப் போட்டியில் சதம் அடித்து ஆட்டநாயகன் விருது வென்ற குயிண்டன் டி காக் பேசும் பொழுது “இது எங்களுக்கு மிகச் சிறந்த வெற்றி. நிலைமைகளை நன்றாக மதிப்பிட்டு, அதற்கு ஏற்ப விளையாடி, எங்களின் பலத்தை நிலை நிறுத்தி முதலிடத்திற்கு வந்திருக்கிறோம்.
அவர்கள் முன்னணியில் இருந்த காரணத்தினால், நாங்கள் எங்களது ஸ்கோரிங் விருப்பங்கள் குறித்து மதிப்பீடு செய்தோம். ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் இருந்ததை வைத்து பார்த்தால் இங்கு இரவில் வியர்வையாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும்.
ஆனாலும் கூட எங்களது பந்துவீச்சாளர்கள் தீவிரம் குறையாமல் பந்து வீசினார்கள். அவர்களுக்கு எந்தவித வாய்ப்பையும் கொடுக்கவில்லை. நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.
ஆனால் இரண்டு போட்டிகள் மட்டுமே நடந்திருக்கிறது. இங்கு எது வேண்டுமானாலும் எப்பொழுதும் நடக்கலாம். அதனால் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒவ்வொரு ஆட்டமாக எடுத்து விளையாட வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!