நேற்று எட்டாவது டி20 உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் மோதிய உயரழுத்த போட்டி ஒன்று கடைசி பந்து வரை சென்று முடிந்தது!
இந்தப்போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 159 ரன்கள் எடுக்க, இரண்டாவது பேட் செய்த இந்திய அணி கடைசி ஓவரின் கடைசி பந்தில் வெற்றி பெற்றது!
இதற்கிடையில் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த அனைத்து ரசிகர்களுக்கும் இதயத் துடிப்பை எகிற செய்யும் வகையில் பல திருப்பங்கள் நிகழ்ந்து, மதில் மேல் பூனை போல் ஆட்டம் கடைசி பந்து வரை நின்று சோதித்தது.
இந்த ஆட்டத்தின் கடைசி ஓவரின் போது ஒரு நோபால் கொடுக்கப்பட்டது, நோ பால் இல்லை என்றும், பிறகு அதற்கான பிரிஹிட் பந்தில் விராட் கோலி போல்டாகி அதில் வந்த ரன்கள் செல்லாது என்றும் சர்ச்சைகள் கிளம்பின.
இந்த நிலையில் நேற்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் களத்தில் நின்ற நடுவர்கள் இந்திய அணிக்கு சாதகமாக நடந்து கொண்டதாக, பிசிசிஐ மற்றும் ஐசிசியை மறைமுகமாக தாக்கி கருத்து சொன்னதாக ஒரு தகவல் உலா வந்தது.
ஆனால் அப்படி பரப்பப்பட்டது ஒரு தவறான தகவல் என்று பின்பு தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்ட நாசர் ஹூசைன், அவர் கூறியதாக சொல்லப்பட்டு பதியப்பட்டு இருந்த ஒரு ட்விட்டர் பதிவில் ” தயவுசெய்து இந்தக் கருத்தை நீக்கிவிடுங்கள். இது போலியான செய்தி மற்றும் போலியான மேற்கோள். இன்று நடந்தது மிகவும் சிறப்பான ஒரு கிரிக்கெட் போட்டி. அதற்கு இப்படி செய்வது தகுதியானது அல்ல!” என்று காட்டமாக கூறியிருக்கிறார்.
சிலர் இந்திய அணியின் வெற்றியை விமர்சித்து நாசர் ஹூசைன் கூறியதாகத் தவறாக பரப்பி வந்த வேளையில், சம்பந்தப்பட்ட அவரே உண்மையை கூறியிருப்பது, பொய்யான தகவலை பரப்பியவர்களுக்கு மூக்குடைப்பாக அமைந்திருக்கிறது. அவரது டுவிட்டர் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!
Probably best if you can delete this please .. it’s fake news and a fake quote and definitely not what a great game of cricket like todays deserves !! Thanks
— Nasser Hussain (@nassercricket) October 23, 2022