இந்திய அண்டர் 19 அணியின் இளம் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூரிய வன்சிக்கு சிறு வயது முதலே பேட்டிங் செய்யும்போது பயம் கிடையாது என அவரது தந்தை கூறி இருக்கிறார்.
நேற்று அண்டர் 19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வலிமையான இங்கிலாந்து அணிக்கு எதிராக வெறும் 80 பந்துகளில் 175 ரன்கள் வைபவ் சூரியவன்சி குவித்தார். இதில் 15 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்கள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
வைபவ் சூரியவன்சி அதிரடியாக நேற்று அந்த இன்னிங்ஸ் விளையாடி இருக்காவிட்டால் நிச்சயம் இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருந்தது. அவர் சதம் அடித்ததற்கு பிறகு காட்டிய அதிரடி தான் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த வகையில் தன்னுடைய அதிரடி பேட்டிங்கை வைத்து தனி ஒரு வீரராக அவர் இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் அவர் சிறுவயதில் இருந்து பேட்டிங் செய்வதில் எப்படியானவர் என்பது குறித்து அவரது தந்தை சஞ்சிவ் சூரியவன்சி கூறி இருக்கிறார்.
இது குறித்து அவரது தந்தை பேசும் பொழுது “அவர் விளையாடத் தொடங்கிய காலத்தில் இருந்து மிகவும் வலிமையான மனநிலை கொண்ட குழந்தை. யாரையும் பார்த்து பயப்பட மாட்டார். சிறிதளவு அச்சம் கூட அவரிடம் இருக்காது. சிறுவயதிலிருந்தே சிறப்பான பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு சிறப்பாக விளையாடுவார். அவர் எந்த சிரமத்தையும் சந்திக்கவில்லை. இந்த அணுகுமுறை அவருக்கு சாதகமாகவே மாறி இருக்கிறது. இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது”
இதையும் படிங்க : உங்களுக்கு ஒரு சூரியவன்சி இருக்கும் போது காலத்தால் அழியாத பிளாக் பஸ்டர் கிடைக்கும் – சச்சின் விராட் வாழ்த்து
“நாங்கள் அவனிடம் ஒரு ரன் அல்லது இரண்டு ரன் எடுத்தாலும் பரவாயில்லை என்று சொல்லிக் கொண்டே இருப்போம். அதற்கு அவன் சிக்ஸர் அடிக்கும் பந்தில் ஒரு ரன் எடுப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று கேட்பான்” என்று கூறி இருக்கிறார்.