இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடரில் இந்திய அணி கடைசி நேர தவறுகளால் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் முதல் போட்டியில் தோற்று இருக்க, நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ஒழுங்காக பேட்டிங் செய்யாமலும், கடைசி நேரத்தில் கேப்டன் ஹர்திக் பாண்டியா எடுத்த தவறான முடிவாலும் தோல்வியை தழுவி இருக்கிறது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு இளம் இடது கை பேட்ஸ்மேன் திலக் வர்மா அரை சதம் அடிக்க, அதன் மூலம் மிகவும் சிரமப்பட்டு 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் சேர்த்தது.
இதற்கு அடுத்து களத்திற்கு வந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை தனது முதல் ஓவரில் இரண்டு ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகள் என கேப்டன் ஹர்திக் பாண்டியா மாற்றினார். முதல் ஓவரிலேயே இந்திய அணிக்கு ஆட்டத்தில் மிகப்பெரிய நம்பிக்கை ஏற்பட்டது.
ஆனால் அதற்குப் பிறகு களத்திற்கு வந்த நிக்கோலஸ் பூரன் எல்லாவற்றையும் மாற்றி விட்டார். மூன்றாவது ஓவரில் ஆரம்பித்த அவரது அதிரடி அவர் இறுதி வரை ஆட்டம் இழக்கும் வரை நிற்கவில்லை. மிகச் சிறப்பாக விளையாடிய அவர் 40 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் மிக எளிதாக வெற்றி பெறும் என்ற நிலையில், நிக்கோலஸ் பூரன் ஆட்டம் இழந்ததும், பதினாறாவது ஓவரை சாகல் வீச வந்தார். அந்த ஓவரில் ஷெப்பர்ட் தேவையில்லாமல் ரன் அவுட் ஆக, ஜேசன் ஹோல்டர் மற்றும் சிம்ரன் ஹெட்மையர் இருவரது விக்கட்டையும் சாகல் கைப்பற்றினார். அந்த இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து, கடைசி நான்கு ஓவர்களுக்கு 24 ரன்கள் தேவை என்ற நிலைக்கு வந்தது.
இந்த இடத்தில் விக்கட்டுகளை வீழ்த்துவது மூலம் இந்திய அணி வெல்வதற்கு மிகப்பெரிய வாய்ப்பு இருந்தது. 17ஆவது ஓவரை முகேஷ் குமார் வீசினார். ஆடுகளத்தில் அந்த நேரத்தில் பந்து நன்றாக திரும்பிக் கொண்டிருந்தது. அக்சர் படேலுக்கு ஒரு ஓவர் கூட தரப்படவில்லை. மேலும் 18வது ஓவரை, மூன்று ஓவர் மட்டுமே வீசி இருந்த சாகலுக்கும் தரவில்லை. இந்த இடத்தில்தான் கேப்டன் ஹர்திக் பாண்டியா எளிதாக செய்ய வேண்டிய வேலையைச் செய்யாமல் மிகப்பெரிய தவறு செய்தார்.
இதன் காரணமாக வேகப்பந்துவீச்சாளர்களை மிக எளிமையாக எதிர்கொண்ட வெஸ்ட் இண்டிஸ் கடைசிக்கட்ட பேட்ஸ்மேன்கள் சிரமம் இல்லாமல் ரன்கள் எடுத்து, 18.5 ஓவரில் இந்திய அணியை தோற்கடித்தார்கள். தற்பொழுது ஹர்திக் பாண்டியாவின் இந்த செயல்தான் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தனது ட்வீட்டில் ” கடந்த இரு ஆட்டங்களாக சாகலுக்கு ஏன் முழுமையாக ஓவர் தந்து முடிக்கவில்லை என்பது புரியவில்லை!” என்று கூறி இருக்கிறார். இதற்கான இணைப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சமூக வலைத்தளத்தில் பல இந்திய ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்!
Baffling for me that Chahal hasn’t finished his quota of 4 overs in both the games. #INDvsWI
— Irfan Pathan (@IrfanPathan) August 6, 2023