சென்னை அணி வருகிற 3 போட்டிகளில் இரண்டு வெற்றி பெற்றால் ஐபிஎல் 2024 பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், நேற்று நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது.
இனி வருகிற இரண்டு போட்டிகளிலும் சென்னை அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஓரளவு வலிமை வாய்ந்த குஜராத் அணியிடமே 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி என்றால், இனி வருகிற ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் என வலிமை வாய்ந்த அணிகளுடன் மோதுவதால் சென்னை அணிக்கு தற்போது பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை அணி இந்த இரண்டு மாற்றங்களை செய்யவில்லை என்றால் நிச்சயமாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது என்பது மிகப்பெரிய சிக்கலாகிவிடும். குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியின் பந்துவீச்சு எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பது அப்பட்டமாக தெரிந்தது. வேகத்தை குறைத்து வீசப்படும் பந்துகளுக்கு மதிப்பு இருக்கிறது என்பதை சென்னை அணி வீரர்கள் நேற்று அறிந்த போதிலும் யாருமே பந்துவீச்சில் வேரியேஷன்கள் காட்டவில்லை.
மேலும் துடிப்பாக வீசக்கூடிய ஒரு வேகப்பந்துவீச்சாளர் கூட சென்னை அணியில் இல்லை என்பது மிகப்பெரிய கவலை. 10 போட்டிகளாகவே தொடர்ந்து பேட்டிங்கில் ஏமாற்றி வரும் ரகானேவுக்கு மீண்டும் நேற்றைய போட்டியில் எதற்காக வாய்ப்பளித்தார்கள் என்பது இன்னமும் புரியவில்லை. இம்பாக்ட் பிளேயராக களம் இறங்கிய ரகானே ஐந்து பந்துகளை எதிர்கொண்டு வெறும் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறுகிறார்.
முதலில் சென்னை அணி தொடக்க வரிசையில் மாற்றம் செய்தே ஆக வேண்டும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன ஆரவல்லி அவினாஷ். அவர் அண்டர் 19 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். மேலும் அவர் கடந்த இரண்டு மாதங்களாகவே சிஎஸ்கே அணியுடன் இருந்து வருவதால் அவர் பேட்டிங்கிலும் நிறைய முன்னேற்றம் கண்டிருக்க வேண்டும். இதனால் அவினாஷ் மிடில் வரிசையில் சிஎஸ்கே அணிக்காக விளையாடலாம். ருத்ராஜ் தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திராவுடன் இன்னிங்ஸ் தொடங்கலாம்.
இரண்டாவதாக சிஎஸ்கே அணியில் முஸ்தபிக்குர் ரஹ்மான் மற்றும் தீபக்சகார் என்ற இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களும் சிஎஸ்கேவை விட்டு விலகிய நிலையில், அதன் பந்துவீச்சு பலவீனம் அப்பட்டமாக தெரிகிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்காக கடந்த காலங்களில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹாஸில்வுட் சிறந்த மாற்று வீரராக இருக்கலாம்.
எனவே இந்த இரண்டு மாற்றங்களையும் சிஎஸ்கே அணி செய்தால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதில் எந்த சிக்கலும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சென்னை அணிக்கு சாதகமான ஒரே ஒரு நல்ல விஷயம் என்றால் பலமான ராஜஸ்தான் அணிக்கு எதிராக சொந்த மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளதால் சென்னை அணி தனது பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து ராஜஸ்தான் அணிக்கு எதிராக காய்களை நகர்த்தும்.