இந்திய கிரிக்கெட் அணி ஒருபுறத்தில் டி20 உலக கோப்பை க்கு அமெரிக்காவில் மிக வேகமாக ரோகித் சர்மா தலைமையில் தயாராகிக் கொண்டிருக்கிறது. இன்னொரு புறத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் புதிய பயிற்சியாளரை தேடிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து ஹர்பஜன் சிங் முக்கியமான விஷயம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் ராகுல் டிராவிட் பதவிக்காலம், டி20 உலகக்கோப்பை உடன் முடிவுக்கு வருகிறது. இதற்கு அடுத்து ஜூலை மாதம் முதல் இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் வர இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த மாதத்தின் துவக்கத்தில் புதிய பயிற்சியாளருக்கான வேட்பு மனுக்களை விநியோகிக்க தொடங்கியது. மேலும் சில நாட்களுக்கு முன்பு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளும் முடிவடைந்து இருந்தது. இந்த நிலையில் யார் யார் விண்ணப்பித்திருக்கிறார்கள்? என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
பெரும்பாலும் இந்திய அணிக்கான புதிய பயிற்சியாளர் பதவிக்கு கவுதம் கம்பீர் முன்னணியில் இருக்கிறார் என்று பலராலும் கூறப்படுகிறது. மேலும் அவர் சம்மதிக்கும் பட்சத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் வேறு யாரையும் யோசிக்காது எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் ஹர்பஜன் சிங் கூறும் பொழுது “அடுத்து யார் வருவார்கள் என்பது குறித்து உண்மையைச் சொன்னால் எல்லாம் யூகமாகவே சுற்றிக் கொண்டிருக்கிறது. ஒரு பயிற்சியாளர் செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயம் அணியின் ஒவ்வொரு வீரர்களையும் ஒன்றிணைப்பது. இதனால் அந்த அணி ஒருங்கிணைந்து விளையாடுகிறது. இந்த வேலையைச் செய்ய கம்பீர் அல்லது நெக்ரா இருவரில் யார் வந்தாலும், முன்னவர்களை விட சிறப்பாக செய்வார்கள் என்று நம்புகிறேன்.
இதையும் படிங்க : ரோகித் ஓபனரா வரக்கூடாது.. பேட்டிங்ல கீழ அவர் ரெக்கார்ட கொஞ்சம் பாருங்க – ஹைடன் ஜாபர் வேண்டுகோள்
நான் தற்பொழுது இந்திய பயிற்சியாளர் பதவியை விரும்பவில்லை. காரணம் தற்போது எனக்கு ஒரு இளம் குடும்பம் இருக்கிறது. நான் அவர்களுக்கு நேரம் செலவிட வேண்டியது மிகவும் முக்கியம். நான் அவர்களை அருகில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் நிச்சயம் நான் ஒரு நாள் சூழ்நிலை அமையும் பொழுது இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு வர விரும்புவேன்” என்று கூறி இருக்கிறார்.