இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் யாருடைய ஆலோசனைகளையும் கேட்டுக் கொள்ள மாட்டார் என வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று இருக்கும் கவுதம் கம்பிற்கு இனிதான் முக்கிய சவால்கள் வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவர் தன்னுடைய வழக்கமான அணுகுமுறையில் தொடர்வாரா? அல்லது இந்திய அணிக்காக டிராவிட் போல அணுகுமுறையை மாற்றிக் கொள்வாரா? என்பது கேள்வியாக இருக்கிறது.
கம்பீரின் அதிரடி அணுகுமுறை
கம்பீர் எப்பொழுதும் வெற்றிக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவர். அவர் எதிர்பார்ப்பதை செய்ய வில்லை என்றால் எந்த வீரராக இருந்தாலும் நகர்த்தி விடக் கூடியவர். அதே சமயத்தில் பணி ஒரே மாதிரியான திட்டத்தில் பயணிக்காமல், வெவ்வேறான திட்டங்களில் செயல்படுவதை விரும்பக் கூடியவர்.
மேலும் அணியில் எல்லோரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர். ஆனால் இந்திய கிரிக்கெட்டில் எப்பொழுதும் சூப்பர் ஸ்டார் உபசரிப்பு சில வீரர்களுக்கு இருந்து வருகிறது. எனவே இப்படியான வீரர்கள் இருக்கும் அணியில் தலைமை பயிற்சியாளராக கம்பீர் எப்படி பொருந்துவார்? என்பது ஆரம்பத்தில் இருந்து பல கிரிக்கெட் வல்லுனர்களின் சந்தேகமாகவே இருந்து வந்திருக்கிறது.
கம்பீர் யார் ஆலோசனையும் ஏற்க மாட்டார்
கம்பீர் குறித்து பேசி இருக்கும் அஜய் ஜடேஜா கூறும்பொழுது ” கம்பீர் அணுகுமுறை ஆக்ரோஷமானது என்பது எப்பொழுதும் தெளிவாக இருக்கக்கூடிய ஒன்று. ஒன்றை உறுதியாக சொல்ல முடியும் அவருடைய பயிற்சியின் கீழ் மந்தமான செயல்பாடு இருக்காது. அவர் எப்பொழுதும் ஏதாவது புதியது ஒன்றைச் செய்யக் கூடியவர். மேலும் தான் நம்புவதைச் செய்பவர்.
கம்பீர் எப்பொழுதும் ஒதுங்கி உட்கார்ந்து விஷயங்கள் நடக்கட்டும் என்று இருக்கக்கூடிய ஆள் கிடையாது. நாம் திடீரென சூரியகுமார் யாதவை கேப்டனாக பார்த்தது போன்ற விஷயங்களை அவர் செய்யக்கூடியவர். எனவே இந்த ஆண்டு அணியில் நிறைய உற்சாகமான விஷயங்களை எதிர்பார்த்து இருக்கிறேன்.
இதையும் படிங்க : தோனி கிரிக்கெட் சட்டத்தைவிட பெரிய ஆளு.. அவர் செஞ்சதை ஏத்துக்கவே முடியாது – அம்பயர் டேர்ல் ஹார்பர் குற்றச்சாட்டு
அவர் யாருடைய பரிந்துரைகளையும் எடுக்க மாட்டார் என்று நான் நம்புகிறேன். அவர் இந்த நிலையில் இருப்பதற்கு காரணமே அவர் விஷயங்களை எப்படி பார்க்கிறார் எப்படி நடந்து கொண்டார் என்பதுதான். எனவே அவர் யாருடைய ஆலோசனைகளையும் கேட்டுக் கொண்டு தன்னுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்ள மாட்டார். அவரை எது சிறப்பானவராக ஆக்கியதோ அதை அவர் தொடர்ந்து பின்பற்றுவார்” என்று கூறியிருக்கிறார்.