இந்த வாரத்தின் இறுதிநாள் ஞாயிற்றுக்கிழமை குஜராத் அகமதாபாத் மைதானத்தில் 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.
ஆஸ்திரேலியா அணி எட்டாவது முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. அந்த அணி இதுவரையில் ஐந்து முறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.
ஆஸ்திரேலியா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இரண்டு முறை மட்டுமே கோப்பையை இழந்து இருக்கிறது. ஒருமுறை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும் ஒருமுறை இலங்கை அணிக்கு எதிராகவும் அது நடந்திருக்கிறது.
இதேபோல் இந்திய அணி இதற்கு முன்பாக மூன்று முறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி, இரண்டு முறை வெற்றி பெற்று இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு முறை இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வி அடைந்திருக்கிறது.
நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் ஆரம்பிக்கும் பொழுது மழை ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கும் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால் தற்பொழுது மழையால் எந்த ஆட்டமும் தடைபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இரண்டு அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு ஐசிசி ரிசர்வ் டே அறிவித்திருந்தது. போட்டி எந்த இடத்தில் நடைபெறுகிறதோ அந்த இடத்தில் இருந்து அடுத்த நாள் நடைபெறும்.
உதாரணமாக போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது மழைவந்து ஓவர்கள் குறைக்கப்பட்டு, மீண்டும் மழை வந்தால், அதே ஓவர்களுடன் அடுத்தநாள் போட்டி தொடரும். ஒருமுறை மழை வந்து அத்தோடு போட்டி நின்றால் போட்டி எந்த இடத்தில் தடைபடுகிறதோ அந்த இடத்திலிருந்து அடுத்த நாள் 50 ஓவர்களாகவே நடைபெறும்.
மேலும் இரண்டு நாட்களும் மழையால் போட்டி நடைபெறாமல் முடிவு தெரியாமல் நின்றால், லீக் சுற்றில் எந்த அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறதோ அந்த அணி உலக சாம்பியனாக அறிவிக்கப்படும்.
இறுதிப் போட்டி நடைபெறும் 19ஆம் தேதி குஜராத் அகமதாபாத் மைதான சுற்றளவில் 33 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும். காற்றில் ஈரப்பதம் 39 சதவீதம் இருக்கும். மாலை வெப்பம் 24 டிகிரி செல்சியஸ் இருக்கும். ஈரப்பதம் கணிசமாக 58 சதவீதமாக அதிகரிக்கும். மழை அச்சுறுத்தல் ஏதும் இருக்காது!