தற்போது விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்திருப்பதாக வரும் செய்தியை வைத்து இங்கிலாந்து கவுண்டி டீம் ஒன்று சர்ச்சையான முறையில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளுக்கு இடையே பதட்டம் அதிகரித்த காரணத்தினால் ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்டது செய்தியாக பரவிக் கொண்டிருந்த நிலையில், விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறார் என்கின்ற செய்தி தற்பொழுது முழுவதுமாக சமூக வலைதளங்களை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் செய்த செயல்
இந்திய அணி ஆஸ்திரேலிய சென்று டெஸ்ட் தொடரில் விளையாடிக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விராட் கோலியை வைத்து இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான டிக்கெட் விற்பனை குறித்தான செய்திகளை வெளியிட ஆரம்பித்து இருந்தது. மைதானத்திற்கு ரசிகர்களை வரவைப்பதற்கு விராட் கோலி மிகப்பெரிய கருவியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக செய்திகள் வெளியானதில் இருந்து, லெஜெண்ட் பிரையன் லாரா முதல் அம்பதி ராயுடு என பலரும் விராட் கோலி இந்த முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும், டெஸ்ட் கிரிக்கெட் வளர்ச்சிக்கு விராட் கோலியின் பங்கு மிகவும் முக்கியமானது எனவும் உருக்கமாக வேண்டுகோள் வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
கவுண்டி டீம் சர்ச்சை பதிவு
மேலும் விராட் கோலி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது தொடர்ந்து ஒரே முறையில் ஆட்டம் இழந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. வேகப்பந்து வீச்சுக்கு எதிராக அவருக்கு வெளியில் செல்லும் பந்தில் பலவீனம் மோசமான அளவுக்கு காணப்பட்டது.
இதையும் படிங்க : மீண்டும் ஐபிஎல் தொடர் எப்போது தொடங்குகிறது.. வெளிநாட்டு வீரர்கள் ஆடுவார்களா?.. ஐபிஎல் சேர்மன் பேட்டி
இந்த நிலையில் ரோத்சே கவுண்டி சாம்பியன்ஷிப் எனும் அணி கவுண்டி வீரர் பந்துவீச்சில் ஒரு பேட்ஸ்மேன் கிளீன் போல்ட் ஆகும் வீடியோவை வெளியிட்டு, விராட் கோலி நாங்கள் உங்களை குற்றம் சொல்லவில்லை என்று பதிவிட்டு இருக்கிறது. அதாவது மறைமுகமாக விராட் கோலி இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களை பார்த்து பயந்து கொண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார் என்கின்ற ரீதியில் பதிவு செய்திருக்கிறது. தற்பொழுது சமூக வலைதளங்களில் இது மிகவும் சர்ச்சையாக மாறியிருக்கிறது.