இந்த ஆண்டு பாதியில் நிறுத்தப்பட்டு இருக்கும் 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் மீண்டும் எப்பொழுது தொடங்கும் என ஐபிஎல் சேர்மேன் அருண் துமால் தெரிவித்திருக்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதட்டம் அதிகரித்த காரணத்தினால் ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. தற்பொழுது இந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வந்திருக்கின்ற காரணத்தினால் ஐபிஎல் தொடர் மீண்டும் எப்பொழுது நடைபெறும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
வெளிநாட்டு வீரர்கள் ஆடுவார்களா?
தற்போது ஐபிஎல் தொடரில் மொத்தம் 12 லீக் போட்டிகள் மற்றும் 4 பிளே ஆப் போட்டிகள் எஞ்சி இருக்கின்றன. இந்த போட்டிகள் அனைத்தையும் தென்னிந்தியாவில் வைத்து நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் யோசித்து வருகிறது என்று கூறப்படுகிறது. தற்பொழுது பதட்ட நிலைமை சரியாகி விட்ட காரணத்தினால் மைதானங்கள் பிரச்சினையாக இல்லை.
அதே சமயத்தில் ஜூன் 11ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. எனவே இந்த இறுதி போட்டியில் விளையாடக்கூடிய ஐபிஎல் தொடரில் விளையாடும் இருநாட்டு வீரர்களும் தயாராகும் விதத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் அட்டவணையை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதைப் பொறுத்தே இந்த இரு நாட்டு வீரர்களும் விளையாடுவார்களா என்பது தெரிய வரும். மற்ற நாட்டு வீரர்கள் விளையாடுவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் உண்டு.
அருண் துமால் பேச்சு
தற்போது ஐபிஎல் சேர்மேன் அருண் துமால் மீண்டும் ஐபிஎல் தொடர் எப்பொழுது ஆரம்பிக்கும்? மீண்டும் உடனடியாக ஆரம்பிப்பதில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கின்றன? யாருடன் கலந்த ஆலோசிக்க வேண்டும் என்பது குறித்தான முக்கிய விஷயங்களை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க : லாரா பேசியும்.. பிடிவாதம் பிடிக்கும் விராட் கோலி.. ஓய்வு முடிவை வாபஸ் வாங்குவாரா?.. வெளியான தகவல்கள்
இது குறித்து அருண் துமால் பேசும் பொழுது ” இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் முற்றிலுமாக இப்பொழுதுதான் தணிந்திருக்கிறது. மீண்டும் ஐபிஎல் தொடரை தொடங்கி முடிப்பதற்கான சாத்தியங்கள் குறித்து நாங்கள் இனிதான் ஆராய இருக்கிறோம். தொடரை உடனடியாக நடத்த முடியும் என்றால் நாங்கள் மைதானம் மற்றும் தேதிகளை முடிவு செய்ய வேண்டும். மேலும் அணி நிர்வாகங்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் அனைவரிடமும் நாங்கள் பேச வேண்டும். மிகக்குறிப்பாக எல்லாவற்றையும் விட இந்திய அரசின் அனுமதியை நாங்கள் பெற வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.