இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் துருவ் ஜுரல் தோனி மற்றும் விராட் கோலி இருவரின் வெற்றிக்கு காரணமான மந்திரம் என்னவென்று கூறியிருக்கிறார்.
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இம்பேக்ட் பிளேயராக வந்து பேட்டிங்கில் கவனம் கவர்ந்தார். அங்கிருந்து அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் எதிர்பாராத விஷயங்கள் நடைபெற்று, இந்திய டெஸ்ட் அணிக்குத் தேர்வாகி சிறப்பாக விளையாடி இடத்தை தக்க வைத்திருக்கிறார்.
நம்ப முடியாத வகையில் வாய்ப்பு
2023 ஆம் ஆண்டு இறுதியில் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இருந்து மனச்சோர்வு காரணமாக விலகிக் கொள்வதாக விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் இந்திய அணியை விட்டு இஷான் கிஷான் வெளியேறினார். இதற்கு அடுத்து இங்கிலாந்து தொடரில் இஷான் கிஷானை தேர்வுக்குழு விரும்பவில்லை.
இதன் காரணமாக யாரும் எதிர்பார்க்காத வகையில் பெரிய புள்ளி விபரங்கள் இல்லாத துருவ் ஜுரலுக்கு இங்கிலாந்து தொடரில் இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட துருவ் ஜுரல், அந்த டெஸ்டு தொடரின் நான்காவது போட்டியில் இந்திய அணியை வெல்ல வைத்து ஆட்டநாயகன் விருது வென்றார். தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்திய அணியில் இடம் பிடித்திருக்கிறார்.
தோனி விராட் கோலியின் வெற்றி ரகசியம்
தோனி மற்றும் விராட் கோலி பற்றி பேசி இருக்கும் துருவ் ஜுரல் கூறும்பொழுது “விராட் பையாவிடம் அவர் எப்படி இவ்வளவு சீராக ரன்கள் குவிக்கிறார்? நான் எப்படி எனது ஆட்டத்தை மேம்படுத்துவது? என்று கேட்டேன். இந்த கேள்விகள் எனக்கு எப்பொழுதுமே ஆச்சரியமானதாக இருந்தது”
“இதே கேள்வியைத்தான் நான் தோனி பையாவிடமும் கேட்டேன். இருவருமே ஜாம்பவான்கள் ஆகிவிட்டார்கள். எனவே அவர்களது வெற்றிக்குப் பின்னால் ஒரு ரகசியம் போல மந்திரம் இருக்க வேண்டும். அது என்னவென்றால் செய்வதற்கு சலிப்பான விஷயங்களை சலிப்பே இல்லாமல் தொடர்ந்து செய்வதுதான்”
இதையும் படிங்க : நான் பும்ரா என்கிட்ட வேணாம்.. இணைந்த 6.4 அடி பவுலர்.. பயிற்சியில் விராட்டுக்கு நடந்த சம்பவம்
“சலிப்பான விஷயங்களை செய்வது எல்லாருக்கும் எளிதாக இருந்திருந்தால் அதை எல்லோருமே செய்திருப்பார்கள். ஆனால் அது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது என்று விராட் பையா என்னிடம் கூறினார். நீங்கள் அந்தச் சலிப்பான விஷயங்களை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் மட்டும் தான் உங்கள் கனவுகளை நினைவாக்க முடியும்” என்று கூறியிருக்கிறார்.