“தோனி ஐபிஎல் 2025ல் கண்டிப்பாக ஆடுவார்.. காரணம் இதுதான்”- நெருங்கிய நண்பர் பேட்டி

0
1183

17 வது ஐபிஎல் சீசன் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் கலந்து கொள்ளும் 10 அணிகளும் முன்னணி வீரர்களைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் மிகத் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்து இறங்கினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், தோனியின் குழந்தைப் பருவ நண்பர் தோனியின் ஐபிஎல் திட்டம் குறித்து சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து உள்ளார்.

ஐபிஎல் தொடங்க இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், சென்னை ரசிகர்கள் தோனியை காண மிகுந்த ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர். இதன் சிறப்புமிக்க முதல் போட்டியில், சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்னும் ஓரிரு தினங்களில் தொடங்க உள்ளது.

- Advertisement -

மகேந்திர சிங் தோனியின் கடைசி சீசனாக இது இருக்கும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் யூகித்து வருவதால், சென்னை அணியின் ரசிகர்கள் சென்னை அணி கலந்து கொள்ளும் ஒவ்வொரு போட்டியையும் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியது முதலே சென்னை அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி நீடித்து வருகிறார்.

ஐபிஎல்லின் தொடக்க வருடத்திலேயே சென்னை அணியை இறுதிப் போட்டி வரைக் கூட்டிச்சென்ற அவர், 2010 ஆம் ஆண்டு முதன்முறையாக இறுதிப் போட்டியில் பரம எதிரியான மும்பை அணியினை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். அதன் பிறகு 2011 ஆம் ஆண்டிலும் கோப்பையை வென்ற சென்னை அணி தொடர்ச்சியாக 2018, 2021, 2023 என்று ஐந்து முறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி ஐபிஎல்லில் வெற்றிகரமான அணியாகத் திகழ்ந்து வருகிறது.

இது தவிர 2010 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் சாம்பியன்ஸ் டிராபி கோப்பைகளையும் வென்றுள்ளது. தற்போது 42 வயதாகும் மகேந்திர சிங் தோனி இம்முறையும் ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்து வெற்றிகரமாக ஓய்வு பெறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், தோனியின் குழந்தை பருவ நண்பரான பிரைம் ஸ்போர்ட்டின் உரிமையாளரான பரம்ஜித் சிங் 2024ஆம் ஆண்டு தோனியின் கடைசி வருடமாக இருக்காது என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க: “ஐபிஎல் 2024 தோனியின் கடைசி சீசனா.?” – ஓபனாக பதில் சொன்ன ரெய்னா

இது குறித்து அவர் மேலும் கூறுகையில் “2024 ஆம் ஆண்டு தோனியின் கடைசி ஐபிஎல் வருடமாக இருக்காது என்று நான் நினைக்கிறேன். தோனி இன்னமும் நல்ல உடற் தகுதியில் இருக்கிறார். அவர் ஒன்று அல்லது இரண்டு சீசன்களில் பங்கேற்கக்கூடும் என்று நான் நினைக்கிறேன். எனவே அவர் கண்டிப்பாக இன்னும் ஒரு சீசனில்(ஐபிஎல் 2025) விளையாடுவார். காரணம் அவரது உடற் தகுதி நன்றாக உள்ளது” என்று கூறியிருக்கிறார். இதனைக் கேட்ட ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.