தற்போது லக்னோ மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு விராட் கோலி ரன்கள் ஏதும் எடுக்காமலும் கில் 9 ரன்களிலும் வெளியேறினார்கள். இதற்கு அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் வழக்கம்போல் தேவையில்லாமல் விளையாடி ஆட்டம் இழந்தார்.
இந்த நேரத்தில் பொறுப்பு முழுக்க இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தோள்களின் மேல் விழுந்தது. தற்பொழுது அதிரடியான அணுகுமுறையை கொண்டிருக்கும் கேப்டன் ரோஹித் சர்மா, இன்று தன்னுடைய ஆட்டம் முறையை சூழ்நிலைக்காக மாற்றிக்கொண்டார்.
கேஎல்.ராகுலுடன் இணைந்து அணிக்குத் தேவையான பார்ட்னர்ஷிப்பை கொண்டுவர ரோகித் சர்மா விளையாடிய விதம் மிகவும் அருமையாக இருந்தது. அவர் ஆடுகளத்தின் தன்மைக்கும், வருகின்ற பந்துக்கும் மதிப்பு கொடுத்து சிறப்பாக விளையாடி 87 ரன்கள் எடுத்தார்.
போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆடுகளத்தில் இந்த பேட்டிங் செயல்பாடு சதத்திற்கு ஒப்பானது. இந்த போட்டியின் மூலம் இந்தியா பேட்ஸ்மேன்களில் தற்போதைய உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்தவராக ரோஹித் சர்மா மாறி இருக்கிறார். இந்தியா 229 ரன்கள் எடுத்திருக்கிறது.
இந்த நிலையில் இலக்கை நோக்கி களம் இறங்கிய இங்கிலாந்து அணி பும்ரா மற்றும் சமி இடம் சிக்கி பவர்பிளேவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து தற்பொழுது தடுமாறிக் கொண்டிருக்கிறது.
ரோகித் சர்மாவின் பேட்டிங்கை பார்த்த உலகக் கோப்பையை இங்கிலாந்துக்கு வென்ற கேப்டன் இயான் மோர்கன் மிகவும் பாராட்டி பேசி இருக்கிறார்.
அவர் கூறும் பொழுது “ரோகித் சர்மா ஒரு பேட்ஸ்மேனாக அணியின் தேவைக்கு ஏற்ப, பல்வேறு நிலைமைகளுக்கு ஏற்ப தனது சொந்த ஆட்டத்தை மாற்றி அமைப்பதில் எனக்கு மிகவும் புத்திசாலியாகத் தெரிகிறார். இன்று மிகச்சிறந்த ஒரு கேப்டன் இன்னிங்ஸ் அவர் விளையாடி இருக்கிறார்!” என்று கூறியிருக்கிறார்!
Eoin Morgan in commentary: 🗣️
— 12th Khiladi (@12th_khiladi) October 29, 2023
“ Absolutely brilliance for me lies in Rohit Sharma's ability to adapt his own game to various conditions, according to his team's needs. He's playing the knock of a captain."#INDvsENG #RohitSharma𓃵 pic.twitter.com/j5XP2FHNaD