இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆசஸ் தொடரின் கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் அதே நேரத்தில், பரபரப்பான குற்றச்சாட்டை வைக்கும் அளவுக்கான விஷயத்தையும் கொண்டிருக்கிறது!
நடைபெற்று முடிந்த நான்கு டெஸ்ட் போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகளை ஆஸ்திரேலியாவும், மூன்றாவது போட்டியை இங்கிலாந்தும் வெல்ல நான்காவது போட்டியை மழை வெற்றி தோல்வி இல்லாமல் டிரா செய்தது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய தொடரை வெல்லவும் இங்கிலாந்து தொடரை சமன் செய்யவும் ஐந்தாவது போட்டியில் வாய்ப்பு நிலவியது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 283 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 295 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி 395 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு 284 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆட்டம் மீதி இரண்டு நாட்கள் இருந்ததால் முடிவு தெரியும் என்று உறுதியானது.
இந்த நிலையில் நான்காவது நாள் ஆட்டம் நடைபெற்ற போது மழை குறுக்கிட்டாலும் ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பு இல்லாமல் 135 ரன்கள் எடுத்தது. இந்த நான்காவது நாளில் நடந்த ஒரு சம்பவம்தான் தற்பொழுது பெரிய பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
என்ன சம்பவம் என்றால், ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்ஸ் 37-வது ஓவரின் போது மார்க் வுட் வீசிய பந்து உஸ்மான் கவாஜா ஹெல்மெட்டை தாக்கியது. இதன் காரணமாக பந்து அதன் வடிவத்தை இழந்து விட்டதாக கூறப்பட்டு, அதற்குப் பதிலாக ஒரு பந்து கொண்டுவரப்பட்டது.
இப்படி ஆட்டத்தில் இருக்கும் பந்து சேதம் அடைந்து மாற்றப்பட்டால், அதே நிலையில் இருக்கும் ஒரு பந்தை தான் மீண்டும் ஆட்டத்திற்கு கொண்டு வருவார்கள். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் மாற்றப்பட்ட பந்து பழைய பந்தை விட புதியதாக இருந்தது. பந்தின் இந்த புதியத்தன்மை காரணமாக, இன்று ஐந்தாவது நாள் ஆஸ்திரேலியாவின் மூன்று விக்கெட்டுகள் வேகமாக சரிந்தது. இதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது இதுகுறித்து பேசி உள்ள ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ” உலகில் யாரும் அந்த இரண்டு பந்துகளையும் பார்த்து ஒரே மாதிரி இருந்தது என்று சொல்லவே முடியாது. இதற்கு முன் இப்படி பலமுறை பந்தை மாற்றி உள்ள அனுபவம் கொண்ட வீரர்கள் எப்படி இப்படி செய்தார்கள் என்று புரியவில்லை. இந்தப் போட்டியில் இது ஒரு பெரிய தருணம். மேலும் டெஸ்ட் போட்டியில் இது மிகப்பெரிய தருணம். இதுகுறித்து உண்மையில் விசாரிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
இன்று காலை பந்து வீசுவதற்கான சிறப்பான நிலைமைகள் இருந்தது உண்மைதான். ஆனால் என்னால் மிக உறுதியாக சொல்ல முடியும், அப்படி மாற்றப்பட்ட பந்து இன்று தன்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்தது என்று. இந்தப் பந்தின் காரணமாக பந்து வீச்சில் நல்ல மூவ்மன்ட் மற்றும் ஸ்விங் இருந்தது. இது ஒரு பெரிய தவறு. எனவே இது குறித்து கட்டாயம் விசாரிக்கப்பட வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்.
"There's no way in the world you can look at those two balls there and say in any way that they're comparable" 😤
— Sky Sports Cricket (@SkyCricket) July 31, 2023
Ricky Ponting is NOT happy with that 'new' ball 😳 pic.twitter.com/maDFpv8RhM