இங்கிலாந்து அணி 17 வருடத்திற்கு பிறகு பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது!
இந்த டெஸ்ட் தொடரில் முதலில் நடந்த இரண்டு போட்டிகளில் வென்று தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது!
இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் டாசில் வென்று பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 304 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் தரப்பில் பாபர் ஆஸம் மற்றும் சல்மான் இருவரும் அரை சதங்கள் அடித்தார்கள். இங்கிலாந்து அணி தரப்பில் ஜேக் லீச் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார்!
அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி தற்போது வரை எட்டு விக்கெட்டுகளை இழந்து 324 ரன்கள் சேர்த்துள்ளது. பாகிஸ்தான் அணி தரப்பில் அப்ரார் அகமத் மற்றும் நுவ்மன் அலி தலா 3 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்கள். இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக ஹரி புரூக்ஸ் 150 பந்துகளில் 111 ரன்கள் விளாசி உள்ளார். இது இவருக்கு இந்த தொடரில் மூன்றாவது சதமாகும். முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 116 பந்துகளில் 153 ரன்களையும், இரண்டாவது டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் 149 பந்துகளில் 108 ரன்களையும் விளாசி இருந்தார். இதெல்லாம் முதல் டெஸ்டில் ஒரு அரை சதத்தையும் அடித்து இருந்தார்.
தற்போது வரை இவர் இந்த டெஸ்ட் போட்டி தொடரில் மூன்று ஆட்டங்களில் ஐந்து இன்னிங்சில் மூன்று சதம் மற்றும் ஒரு அரை சதம் அடித்து மிரட்டி உள்ளார். இவர் குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் கூறியிருக்கும் பொழுது, இவரை அடுத்த விராட் கோலி என்று கூறியிருந்தார். இவரது பேட்டிங் டெக்னிக்கும் விராட் கோலி போலவே மிக எளிமையாகவும் அதே சமயத்தில் விக்கெட் வீழ்த்த முடியாத அளவிற்கு வலிமையானதாகவும் இருக்கிறது. எதிர்காலத்தில் இந்த இளம் வீரர் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் குறிப்பிடத்தக்க அளவு சாதனைகள் படைப்பார் என்று எதிர்பார்க்கலாம்!