டெஸ்டுக்கு தனி டீம், டி20-ஒன்டேக்கு தனி டீம்; இதான் சரியான டைம் – அனில் கும்ப்ளே கருத்து!

0
1082

லிமிடெட் ஓவர் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு என்று தனித்தனியாக அணிகளை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கருத்து தெரிவித்திருக்கிறார் அணில் கும்ப்ளே.

டி20 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்துவிட்டது. இந்திய அணிக்கு இந்த தொடர் நன்றாக துவங்கி இருந்தாலும், இறுதி சரியாக அமையவில்லை. இங்கிலாந்திடம் அரை இறுதி போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது. அதுவும் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

- Advertisement -

இந்திய அணியின் தோல்விக்கு மூத்த வீரர்கள் மீது காரணமும் கூறப்பட்டு வருகிறது. அணியை மாற்றுவதற்கு இதுதான் சரியான நேரம் என்று கவாஸ்கர், ரவி சாஸ்திரி போன்ற ஜாம்பவான்கள் பலர் வலியுறுத்தினர்.

அந்த வரிசையில் அணில் கும்ப்ளே இந்திய அணியை மாற்ற வேண்டும், டி20-ஒருநாள் போட்டிகளுக்கு தனி அணியாகவும் டெஸ்ட் போட்டிகளுக்கு தனி அணியாகவும் உருவாக்கி பலப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். அவர் கூறுகையில்,

“இந்திய அணியின் முன்னணி வீரர்கள் மூன்று வித போட்டிகளிலும் ஆடுகின்றனர். அது அவர்களுக்கு வேலைப்பளுவை அதிகரித்து மனதளவிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆகையால் ஒரு சில வீரர்கள் தவிர, மற்றவர்களை பிரத்தியேகமாக அந்தந்த போட்டிகளுக்கு என்று வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

டெஸ்ட் போட்டிக்கான வீரர்களை லிமிடெட் ஓவர் போட்டிகளில் ஆட வைத்தால், அவர்கள் ஆடமாட்டேன் என்று மறுக்க மாட்டார்கள். ஆனால் வேலைப்பளு காரணமாக செயல்பாட்டில் குறைவு ஏற்படலாம்.

உலக கோப்பையில் ஏற்பட்ட இந்த தோல்வி ஒரு பாடமாக அமையட்டும். டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு என்று தனி அணியை உருவாக்கி பலப்படுத்த வேண்டும். இனியும் ஐசிசி கோப்பைகளை வெல்லாமல் வீண் விமர்சனங்களை சந்திக்காமல் இருக்க வேண்டும்.

அதேபோல் டெஸ்ட் போட்டிகளில் வீரர்களின் மனவலிமையை பரிசோதித்து அவர்களுக்கு அணியில் இடம் கொடுக்க வேண்டும். அப்படி வீரர்களை அதற்கு ஏற்றவாறு சரியாக பயன்படுத்தினால் அவர்களின் செயல்பாடும் 100% இருக்கும்.” என்றார்.