இன்றைய கிரிக்கெட் உலகில் சிவப்பு பந்தில் மிக மிக ஆபத்தான பந்துவீச்சாளர் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி என்று தாராளமாகக் கூறலாம்!
அவருடைய அப் ரைட் சீன் அவரை மிக மிக ஆபத்தான பந்துவீச்சாளராக மாற்றுகிறது. பீல்டிங் செய்யக்கூடியவர்களின் துணை இன்றி அவர் தாமாகவே போல்ட் எல் பி டபிள்யு மூலம் அதிக விக்கெட்களை பெற்றுக்கொள்ளும் தற்சார்பு பந்துவீச்சாளராக இருக்கிறார்.
ஆனால் 2018 ஆம் காலகட்டத்தில் அவர் பந்துவீச்சில் மட்டும் அல்லாது உடல் தகுதியிலும் மிகவும் பின்தங்கி மனதளவில் உடைந்து காணப்பட்டார். அப்படியான காலகட்டத்தில் நடந்த ஒரு சிறப்பான சம்பவத்தை அப்போது இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த பரத் அருண் வெளியிட்டு இருக்கிறார்.
பரத் அருண் கூறும் பொழுது
” 2018 இங்கிலாந்து டூருக்கு முன்பாக நாங்கள் ஒரு உடற்தகுதி தேர்வில் இருந்தோம். அதில் முகமது சமி தோல்வி அடைந்தார். அவர் இந்திய அணியில் இடத்தையும் இழந்தார். அந்தச் சமயத்தில் அவர் என்னிடம் பேச விரும்புவதாக கூறினார். அதனால் நான் அவரை என் அறைக்கு அழைத்தேன். அவர் அப்போது மிகவும் குழப்பத்தில் இருந்தார். உடல் தகுதியை இழந்து மனதளவில் உடைந்து காணப்பட்டார் ” என்று கூறினார்!
தொடர்ந்து பேசிய அவர் ” என் அறைக்கு வந்த அவர் மிகவும் கோபமாக இருந்தார் மேலும் கிரிக்கெட்டில் இருந்து வெளியேறி விடுவதாக கூறினார். இதனால் நான் அவரை ரவி சாஸ்திரியின் அறைக்கு அழைத்துச் சென்றேன். அப்பொழுது என்னிடம் கூறியதையே சமி ரவியிடமும் கூறினார். அப்போது நாங்கள் இருவரும் என்ன செய்வீர்கள் என்று கேட்டோம்? உங்களுக்கு வேறு என்ன தெரியும்? உங்களுக்குப் பந்தை கையில் கொடுத்தால் வீச மட்டும்தான் தெரியும் என்று கூறினோம் ” என்று தெரிவித்தார்!
மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” அப்பொழுது ரவி சாஸ்திரி கோபமாக இருந்த அவரிடம், நீ கோபமாய் இருப்பது நன்றாக இருக்கிறது. உன் கையில் பந்து இருப்பது உனக்கு நல்ல விஷயம். உன்னுடைய பிட்னஸ் மிக மோசம். உனக்கு என்ன கோபம் வந்தாலும் அதை உன் உடல் தகுதியின் மேல் காட்டு. நாங்கள் உன்னை வீட்டுக்கு அனுப்ப மாட்டோம். அதற்கு பதிலாக உன்னை நேஷனல் கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்புகிறோம். நீ அங்கு 4, 5 வாரங்கள் பயிற்சி செய் என்று கூறினார். முகமது சமிக்கு கொல்கத்தாவுக்கு செல்வதில் பிரச்சனை இருந்ததால் அவரும் இதை ஏற்றுக் கொண்டார். பின்பு அவர் பெங்களூர் சென்று பயிற்சியில் ஈடுபட்டார். பின்பு சமி என்னிடம் கூறியது எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது.
அவர் ‘ நான் இப்பொழுது மிகவும் இளைஞன் போல் ஆகி விட்டேன் சார். நீங்கள் என்னை எவ்வளவு தூரம் ஓடச் சொன்னாலும் நான் ஓடுவேன்’ என்று கூறினார். அவர் அங்கு செலவு செய்த ஐந்து வாரங்களில் உடல் தகுதியால் என்னென்ன செய்ய முடியும் என்பதை உணர்ந்து கொண்டார்” என்று தெரிவித்துள்ளார்!