இந்திய அணி டி20 உலக கோப்பை தொடரில் புள்ளி பட்டியலில் வலுவான நிலையில் உள்ளது. நாளை அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் உறுதியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று விடும்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் சிஎஸ்கேவின் முன்னாள் வீரருமான அம்பத்தி ராயுடு இந்தியா பேட்டிங் ஆர்டரில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த சில ஆண்டுகளாகவே அபாரமான ஆட்டத்தை சிவம் தூபே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக மிடில் ஆர்டரில் களம் இறங்கி சுழற் பந்துவீச்சை நின்ற இடத்திலேயே சிக்ஸர்களை அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பல போட்டிகளை வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார்.
இதனாலேயே இவரை ரசிகர்கள் ‘ஆறுச்சாமி’ என்று அழைத்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் நடப்பு சீசனின் ஐபிஎல் தொடரில் இரண்டாவது பாதியில் சிவம் தூபெ டி20 உலக கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட பிறகு அவரது பேட்டிங்கில் தொய்வு காணப்பட்டது. இருப்பினும் அவர் டி20 உலக கோப்பையில் தனது ஆட்டத்தை மீட்டெடுப்பார் என்று அனைவரும் கருதினர்.
வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் களமிறங்கியும் பேட்டிங்கில் சொதப்பினார். அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் இவருக்கு பேட்டிங் அவ்வளவாக கிடைக்கவில்லை. இருப்பினும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் களமிறங்கிய தூபே இக்கட்டான சூழ்நிலையில் மீட்டெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒன்பது பந்துகள் சந்தித்த நிலையில் வெறும் மூன்று ரன்கள் மட்டுமே குவித்து வெளியேறினார்.
இதனால் இவரை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று பலரும் கூறி வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் சிஎஸ்கே வீரருமான அம்பத்தி ராயுடுவும் இதே கருத்தினை தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“தற்போதைய டி20 உலக கோப்பை அணியில் சிவம் துபேவுக்கு பதிலாக சஞ்சு சாம்சனையோ அல்லது ஜெய்ஸ்வாலையோ விளையாட வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டருக்கு பொருத்தமான வீரராக இருப்பார். அவருக்கு இந்திய அணியில் தேவையான அனுபவமும் உள்ளது. மேலும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருவதால், சூழ்நிலையை உணர்ந்து விளையாடும் நுணுக்கமும் அவரிடம் உள்ளது. இதனால் மிடில் ஆர்டருக்கு சஞ்சு சாம்சன் பொருத்தமான வீரராக இருப்பார்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:வாசிம் அக்ரம் தெரியாம பேசக்கூடாது.. இந்தியா கூட தோத்து நம்பிக்கையே போச்சு – பாக் கோச் அசார் மஹ்மூத் பதிலடி
சஞ்சு சாம்சன் ஏற்கனவே டி20 உலக கோப்பை பயிற்சி போட்டியில் விளையாடியிருக்கிறார். இருப்பினும் அந்தப் போட்டியில் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறியதால் அதற்குப் பிறகு அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. விக்கெட் கீப்பராக ஏற்கனவே ரிஷப் பண்ட் நன்றாக செயல்பட்டு வருகிறார். இதனால் சிவம் துபேவுக்கு பதிலாக மிடில் ஆர்டரில் வேண்டுமானால் அவரை களம் இறக்க அதிக வாய்ப்புள்ளது.