இன்று பெண்கள் உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டி ஒன்றில் கத்தார் அணிக்கு எதிராக யுஏஇ அணியின் அனைத்து வீராங்கனைகளும் ரிட்டையர்டு அவுட் வெளியேறி ஆச்சரியப்படுத்திய சம்பவம் நடந்திருக்கிறது.
இந்த ஆண்டு நடைபெற இருக்கும் பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடர்கான தகுதிச்சுற்று போட்டிகள் உலகெங்கும் நடைபெறுகிறது. இதில் ஆசிய கண்டத்துக்கான தகுதிச்சுற்று போட்டி ஒன்றில் கத்தார் மற்றும் யுஏஇ அணிகள் மோதி கொண்ட போட்டி நடைபெற்றது.
அதிரடியில் மிரட்டிய யுஏஇ அணி
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற யுஏஇ அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் துவக்க வீராங்கனைகள் ஈசா ரோகித் 55 பந்துகளில் 113 ரன்கள், தீர்த்தா சதீஷ் 42 பந்துகளில் 74 ரன்கள் என இருவருமே ஆட்டம் இழக்காமல், வெறும் 16 ஓவர்களில் 192 ரன்கள் குவித்தார்கள். இதைத் தொடர்ந்து அந்த அணியின் 10 வீராங்கனைகளும் ரிடையர்ட் அவுட் முறையில் ஒரு பந்தை கூட சந்திக்காமல் ஆட்டம் இழந்தார்கள். தொடர்ந்து அந்த அணி 16 ஓவரில் 192 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதைத்தொடர்ந்து களம் இறங்கிய கத்தார் பெண்கள் அணி 11.1 ஓவரில் வெறும் 29 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகி தோற்றது. யுஏஇ அணியின் மிச்சல் போத்தா 3, கேட்டி தாம்சன் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். இதைத்தொடர்ந்து அந்த அணி 163 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது.
ரிடையர்ட் அவுட் ஆக காரணம் என்ன?
டி20 கிரிக்கெட் பொருத்தவரையில் நாம் குறிப்பிட்ட ஓவர்கள் விளையாடி போட்டியை டிக்ளர் செய்து கொள்ள முடியாது. இதுவே டெஸ்ட் கிரிக்கெட் என்றால் நாம் விரும்பும் வரை பேட்டிங் செய்து விட்டு டிக்ளேர் செய்து கொள்ள முடியும். எனவே டி20 கிரிக்கெட்டில் 20 ஓவர்களும் பேட்டிங் செய்ய வேண்டும் அல்லது ஆல் அவுட் ஆக வேண்டும் என்பது விதியாக இருக்கிறது.
இதையும் படிங்க : ஐபிஎல் தொடருக்கு பிசிசிஐ தேர்ந்தெடுத்த 3 மைதானங்கள்.. காத்திருக்கும் வேறொரு சோகம்.. முழு விபரங்கள்
இந்த நிலையில் இந்த போட்டி மழையின் காரணமாக தடைபடக்கூடிய சூழ்நிலை இருந்தது. எனவே விக்கெட் இழப்பில்லாமல் பதினாறு ஓவரில் 192 ரன்கள் குவித்துவிட்ட யுஏஇ அணிக்கு மேற்கொண்டு சிறிய அணியான கத்தார் அணிக்கு எதிராக ரன்கள் தேவைப்படவில்லை. எனவே மழை வருவதற்குள் கத்தார் அணிணியை பந்துவீசி வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக 16 ஓவரோடு பேட்டிங்கை முடித்துக் கொள்வதற்காக, யுஏஇ அணியின் அனைத்து வீராங்கனைகளும் ரிடையர்ட் அவுட் ஆனார்கள். இதனால் அந்த அணி 16 ஓவரில் ஆல் அவுட் ஆனதாக அறிவிக்கப்பட்டது. புத்திசாலித்தனமாக செயல்பட்ட யுஏஇ அணியை தற்பொழுது அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.