ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஐசிசி தொடர்களிலும் இருதரப்பு தொடர்களிலும் நம்ப முடியாத வகையில் ஆச்சரியமூட்டும் பல விஷயங்களை செய்து வருகிறது. கடைசியாக நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரையும் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது.
இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனான ஹஷ்மத்துல்லா ஷாஹிதி ஆப்கானிஸ்தான் அணியின் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக விளங்கிய இந்திய வீரர் குறித்து சில உணர்ச்சிமிகு கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ஆசிய நாடுகளில் கிரிக்கெட்டில் வளர்ந்த அணியான இந்தியா ஒருபுறம் தனது ஆதிக்கத்தை சர்வதேச கிரிக்கெட்டில் நிகழ்த்திக் கொண்டிருந்தாலும், மற்றொரு கத்துக்குட்டியான வளர்ந்து வரும் ஆசிய அணியின் ஆப்கானிஸ்தான் மற்ற ஆசிய அணிகளை காட்டிலும் சிறந்து விளங்கி வருகிறது. கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த சில காலங்களிலேயே கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று ஆச்சரியப்படுத்தியது.
அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் நடைபெற்ற முடித்த டி20 உலக கோப்பையில் அரை இறுதி வரை வந்து முன்னணி அணிகளையே தோற்கடித்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. மேலும் இதற்குப் பிறகு நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இதற்கெல்லாம் அடித்தளமாக விளங்கியது ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் ஆலோசகராக செயல்பட்ட இந்தியாவின் அஜய் ஜடேஜா அணிக்கு ஒரு நம்பிக்கையாக திகழ்ந்து இருக்கிறார். இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் அஜய் ஜடேஜா குறித்த சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “அஜய் ஜடேஜா என் வாழ்வில் மிகவும் நேர்மறையான நபர், அவரைப் போல ஒரு நேர்மையான நபரை நான் இதுவரை பார்த்ததில்லை. கடுமையான நேரங்களிலும் சூழ்நிலைகளிலும் அவர் எங்களை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார். அவருக்கு சூழ்நிலைகளைப் பற்றிய புரிதல் அதிகமாகவே இருந்தது. உலகக் கோப்பை முடிந்த பிறகு ஆப்கானிஸ்தான் அணிக்காக அவரது கண்களில் நான் கண்ணீரை கண்டேன்.
அந்த வீடியோவும் என்னிடம் உள்ளது. அவர் ஆப்கானிஸ்தான் அணியை மிகவும் நேசித்தார். நாங்கள் இன்னமும் அவருடனான தொடர்பில் இருக்கிறோம். இதில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாக கூற வேண்டும் என்றால், 2023 ஒரு நாள் உலகக் கோப்பையின் போது தனது சேவைகளுக்காக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து பணம் எதையும் வாங்க மறுத்து விட்டார். நாங்கள் எவ்வளவோ வற்புறுத்தினோம், ஆனால் அதற்கு அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:நாளை கான்பூர் 2வது டெஸ்ட்.. கவலை தரும் மழை வாய்ப்பு.. ஆடுகளம் மற்றும் மைதான புள்ளி விபரங்கள் – முழு தகவல்கள்
மேலும் அரியானா நியூஸ் பத்திரிக்கையில் வெளிவந்த தகவலின் படி, ஆப்கானிஸ்தான் அணி நன்றாக விளையாடினாலே தனக்கு அதுதான் பணமும் வெகுமதியும் என்று அஜய் ஜடேஜா கூறி இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.