பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி டிக்ளர் செய்த பிறகு போட்டியில் தோல்வியடைந்தது பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா சமூக வலைதளத்தில் பாகிஸ்தான் அணியை ட்ரோல் செய்யும் விதமாக தனது கருத்தை வெளியிட்டு இருக்கிறார்.
வங்கதேச அணி பாகிஸ்தானில் டெஸ்ட் தொடர் விளையாடி வரும் நிலையில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 21ஆம் தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் ஆறு விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. தனது பலமான பந்துவீச்சை வைத்து வங்கதேச அணியை சிதைத்து விடலாம் என்று எதிர்பார்த்தது. ஆனால் அதற்கு ஆடுகளம் சுத்தமாக கை கொடுக்கவில்லை.
பேட்டிங்க்கு முற்றிலும் சாதகமாக மாறிய நிலையில் தனது முதல் இன்னிங்சை விளையாடிய வங்கதேச அணி 565 ரன்கள் குவித்தது. 117 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கிய பாகிஸ்தான் அணி 146 ரன்கள் மட்டுமே குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதனால் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் குவித்து வங்கதேச அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது.
இதுகுறித்து இந்தியாவின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும்போது ” 400க்கும் அதிகமான ரன்கள் மற்றும் நான்கு விக்கெட் மீதம் இருந்த நிலையில் டிக்ளர் செய்த பிறகு பல அணிகள் டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைவதில்லை. அதுவும் உள்நாட்டில் எந்த அணிக்கும் இது போன்று நிகழாது. ஆனால் பாகிஸ்தான் அணி தொடர்ந்து பரிசு கொடுத்துக் கொண்டே இருக்கிறது” என்று கிண்டலடிக்கும் விதமாக தனது கருத்தை வெளியிட்டு இருக்கிறார்.
இந்தப் போட்டி கிட்டத்தட்ட ட்ராவில் முடியும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் வங்கதேச அணி எதிர்பாராத விதமாக பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டது. குறிப்பாக ஆல்ரவுண்டர் ஷகிப் அல்ஹசன் மூன்று விக்கெட்டுகளும் மெகதி ஹாசன் நான்கு விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். கிட்டத்தட்ட பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் பாகிஸ்தான் அணியை விட வங்கதேச அணி சிறப்பாக செயல்பட்டு இந்த வெற்றிக்கு தகுதியாக மாறி இருக்கிறது.
இதையும் படிங்க:ரவி சாஸ்திரி பேச்சு.. நேரடி மோதலா இருக்கு.. சொந்த நாட்ல சாதிக்கிறது பெருசு இல்ல – ஹைடன் பேச்சு
அதுமட்டுமல்லாமல் சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய முதல் அணி என்ற பெருமையையும் வங்கதேச அணி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு அணிகளுக்கிடையே நடக்க உள்ள இரண்டாவது போட்டியில் வருகிற 30-ஆம் தேதி நடைபெற உள்ளது.