நீங்க மும்பைக்கு விளையாடாமல் இருந்தால் உலகம் ஒன்னும் அழியாது..பும்ராவுக்கு ஆகாஷ் சோப்ரா காட்டம்!

0
260

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர  வேகப்பந்துவீச்சாளர் பும்ராவை ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சில போட்டிகளில் ஓய்வு கொடுக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தியுள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பிறகு காயத்தால் அவதிப்பட்ட பும்ரா பல்வேறு தொடரில் விளையாடாமல் இருந்தார்.  அதன் பிறகு, ஓய்வில் இருந்து வந்த பும்ரா ஆஸ்திரேலியா தொடரில் விளையாடினார்.

- Advertisement -

எனினும் பும்ராவுக்கு  மீண்டும் காயம் ஏற்பட்டது. இதனால் டி20 உலக கோப்பை தொடரில் பும்ரா பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பிறகும் உடல் தகுதி எட்டப்படாத நிலையில், நேரடியாக ஐபிஎல் தொடரில் விளையாட பும்ரா திட்டமிட்டுள்ளார். இதனால் பும்ரா வெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு மட்டும் தான் விளையாடுவார் என்று இந்திய ரசிகர்கள் காட்டமான விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆகாஷ் சோப்ரா வெளியிட்டுள்ள கருத்தில், முதலில் நீங்கள் ஒரு இந்திய வீரர் அதன் பிறகு தான் லீக் கிரிக்கெட்டுக்காக நீங்கள் விளையாட வேண்டும். ஐபிஎல் தொடரில் விளையாடும் போது பும்ராக்கு ஏதேனும் உடல் அளவில் சிக்கல் ஏற்பட்டால் பிசிசிஐ உடனே தலையிட வேண்டும். பும்ராவை விளையாட அனுமதிக்க கூடாது. ஐபிஎல் தொடரில் பும்ரா ஜோப்ரா ஆர்ச்சருடன் விளையாட வில்லை என்றால் உலகம் ஒன்றும் அழிந்து விடாது. அதே சமயம் பும்ரா முழு உடல் தகுதியை பெற்று விட்டால் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும். போட்டிகளில் பங்கேற்றால் மட்டுமே வீரர்கள் பழைய பார்மை மீட்க முடியும். பும்ரா நம் நாட்டின் புதையல் போன்ற வீரர். அவரைக் காக்க பிசிசிஐ நடவடிக்கை எடுத்தால் அதற்கு மும்பை இந்தியன்ஸ் அணி முழு ஒத்துழைப்பை அளிப்பார்கள் என நான் நம்புகிறேன்.

வீரர்களை நிர்வாகம் செய்வதும் எந்த கடினமும் இருக்காது என நம்புகிறேன். ஐபிஎல் தொடங்க இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் இருக்கிறது.  உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் இறுதிப் போட்டிக்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கிறது. இதனால் பும்ரா அதில் விளையாடுவாரா என்பதை இப்பொது சொல்ல முடியாது. பும்ரா முழு உடல் தகுதியை பெற்றுவிட்டால், அவர் இராணி கோப்பை அல்லது கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி தனது பழைய பந்துவீச்சை திரும்ப பெற வேண்டும் என ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாடாமல் ஐபிஎல் தொடருக்காக பும்ரா முழு உடல் தகுதி எட்ட முயற்சி செய்வதாக ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை வைத்து வருவதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பும்ரா இடம்பெற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -