மேன்கடிங் விஷயத்தில் தோனியை பின்பற்றுங்கள் என்று வீடியோ பதிவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் மான்டி பனேசர்.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய பெண்கள் அணி இங்கிலாந்து அணியுடன் டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடியது. ஒருநாள் தொடரை 3-0 என்று கணக்கில் இந்திய பெண்கள் அணி கைப்பற்றியது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் 170 ரன்கள் இலக்கை செஸ் செய்து கொண்டிருந்த இங்கிலாந்து பெண்கள் அணி ஒன்பது விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் அடித்திருந்தபோது, 44-வது ஓவரை தீப்தி சர்மா வீசினார்.
அப்போது பந்துவீச்சு முனையில் நின்று கொண்டிருந்த இங்கிலாந்து பெண் வீராங்கனை சார்லட் டீன் என்பவர், அவ்வபோது பந்து வீசுவதற்கு முன்னரே கிரீசை விட்டு வெளியே சென்று கொண்டிருந்தார். அந்த இன்னிங்சில் ஒன்றுக்கு இரண்டு முறை வார்னிங் கொடுத்தும் மதிக்காமல் செய்து கொண்டிருந்ததால், தீப்தி ஷர்மா மேன்கடிங் முறைப்படி அவுட் ஆக்கினார்.
ஏற்கனவே 9 விக்கெட்டுகளை இழந்துருந்த இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு இன்னும் 16 ரன்கள் மட்டுமே தேவை என இருக்கும் தருவாயில் இப்படி ஆட்டம் இழந்தது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு இந்தியாவைச் சேர்ந்த அஸ்வின் மற்றும் விரேந்திர சேவாக் ஆகியோர் ஆதரவு கொடுத்து இருந்தாலும், பலரும் இது “முறையற்ற செயல்” “கிரிக்கெட்டிற்க்கு இது ஒரு இழுக்கு” கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் இங்கிலாந்து அணியை சேர்ந்த முன்னாள் வீரர் இந்திய பெண்கள் அணிக்கு ஆதரவாக பேசியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
முன்னாள் இங்கிலாந்து சுழல் பந்துவீச்சாளர் மான்டி பனேசர் தனது ட்விட்டர் பக்கத்தில், தோனி ஐபிஎல் போட்டியின் போது மேன்கடிங் நடக்காமல் இருக்க செய்த செயலின் வீடியோ பதிவை பகிர்ந்து, “மகேந்திர சிங் தோனியை பின்பற்றுங்கள். நீங்கள் இனி மேன்கடிங் முறைப்படி ஆட்டம் இழக்க மாட்டீர்கள்.” என்று பதிவிட்டு இருந்தார்.
தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆகி உள்ளது
This is how you back up. Keep your bat in the crease. #mankading https://t.co/1iqq6AijIj
— Monty Panesar (@MontyPanesar) September 25, 2022