இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் விக்கெட்டில் இருந்து ஆறாவது விக்கெட் வரை 50+ பார்ட்னர்ஷிப் அமைந்தது இந்த டெஸ்ட் போட்டியில் மட்டுமே. இது புதிய வரலாற்று சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
பார்டர் கவாஸ்கர் டிராபியில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி அபார சாதனையை, இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் இல்லாத அளவிற்கு படைத்திருக்கிறது.
ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 480 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. அதன் பிறகு பேட்டிங் செய்து வரும் இந்திய அணிக்கு சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஜோடி சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்தனர். பின்னர் ரோகித் சர்மா 35 ரன்கள் ஆட்டம் இழந்தார்.
அடுத்து வந்த புஜாரா, சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தனர். முக்கியமான கட்டத்தில் புஜாரா 42 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.
அதன்பிறகு உள்ளே வந்த விராட் கோலி, சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்தனர். அபாரமாக ஆடிய சுப்மன் கில் 128 ரன்களுக்கு அவுட்டானார்.
4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ஜடேஜா இருவரும் 64 ரன்கள் சேர்த்தனர். ஜடேஜா 28 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக கேஎஸ் பரத் உள்ளே வந்தார்.
5வது விக்கெட்டுக்கு விராட் கோலி மற்றும் பரத் இருவரும் சேர்ந்து 84 ரன்கள் சேர்த்தனர். அப்போது 44 ரன்களில் இருந்த பரத், துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.
தற்போது உள்ளே வந்திருக்கும் அக்ஸர் பட்டேல், 6வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து 79 ரன்கள் சேர்த்து களத்தில் இருக்கின்றனர்.
இப்படி முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் இருந்து, 6வது விக்கெட் பார்ட்னர்ஷிப் வரை அனைத்திலும் 50+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்தது, இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இப்படி 3வது முறையாக நிகழ்கிறது. 1960ல் ஆஸ்திரேலியா அணியும், 2015ம் ஆண்டில் பாகிஸ்தான் அணியும், இன்றைய போட்டியில் இந்திய அணியும் நிகழ்த்தியுள்ளனர்.