தீபக் சாஹர் தவிர இன்னும் 2 சி.எஸ்.கே வீரர்களுக்கு காயம் – விரக்தியில் ரசிகர்கள்

0
159
Deepak Chahar CSK

இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 26ஆம் தேதி முதல் நடைபெற இருக்கின்றது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. இப்போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கின்றது.

முதல் போட்டியை எதிர்நோக்கி அனைத்து ரசிகர்களும் தற்பொழுது ஆவலாக காத்துக் கொண்டிருக்கும் நிலையில், சென்னை அணி ரசிகர்கள் வருத்தத்துடன் இருக்கின்றனர். அவர்கள் வருத்தத்துடன் இருப்பதற்கு மிக முக்கிய காரணம், அந்த அணியின் முக்கிய வீரர்கள் தற்பொழுது இஞ்சுரியாகி இருக்கின்றனர்.

- Advertisement -

தீபக் சஹர்

2018 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பவர் பிளே மற்றும் டெத் ஓவர்களில் மிக அற்புதமாக பந்துவீசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர் ஆவார். 2018 முதல் கடந்த ஆண்டுவரை சென்னை அணிக்காக மொத்தமாக 58 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார்.

சென்னை அணிக்காக மிக அற்புதமாக விளையாடி அவரை கடந்த மாதம் நடந்து முடிந்த மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீபக் சஹர் 14 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. ஆனால் நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் பல போட்டிகளில் அவர் பங்கேற்கப் போவதில்லை என்கிற அதிர்ச்சி செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான சமீபத்தில் நடந்து முடிந்த டி20 தொடரின் கடைசி போட்டியில் விளையாடிய அவருக்கு கால் தசையில் சிறிய பிளவு ஏற்பட்டுள்ளது. அந்த காயம் குணமடைய சில நாட்கள் தேவைப்படும் என்று அப்பொழுது மருத்துவ குழு கூறியிருந்தது.

- Advertisement -

ஆனால் தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி அவரது காயம் குணமடைய இன்னும் சில நாட்கள் தேவைப்படும். அதன் காரணமாக நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் பல போட்டிகளில் அவர் பங்கேற்கப் போவதில்லை என்கிற தகவல் தற்போது கிடைத்துள்ளது.

ருத்ராஜ் கெய்க்வாட்

சென்னை அணிக்கு 2020 ஆம் ஆண்டு 6 போட்டிகளில் விளையாடி 204 ரன்கள் குவித்தார். பின்னர் கடந்த ஆண்டு 16 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் நான்கு அரை சதம் உட்பட 635 ரன்கள் குவித்தார். கடந்த ஆண்டு சென்னை அணி கோப்பையை கைப்பற்ற இவரது ஓபனிங் மிகப்பெரிய அளவில் கைகொடுத்தது. அதன் காரணமாகவே சென்னை அணி இவர் மீது நம்பிக்கை வைத்து 6 கோடி ரூபாய்க்கு மீண்டும் தக்க வைத்துக் கொண்டது.

இலங்கை அணிக்கு எதிராக நடைபெற இருந்த டி20 தொடரில் ருத்ராஜ் விளையாடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவருடைய கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ள காரணத்தினால் டி20 தொடரில் இருந்து வெளியேறினார். அது சம்பந்தமாக சிகிச்சை எடுத்து வரும் ருத்ராஜ் ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பாக குணமடைந்து விடுவார் என்று நம்பிக்கையுடன் கூறப்படுகிறது. இருப்பினும் அவர் முதல் போட்டியில் இருந்து விளையாடுவாரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்.

மஹீஷ் தீக்சானா

இலங்கையைச் சேர்ந்த இளம் ஸ்பின் பந்து வீச்சாளரான மஹீஷ் தீக்சானாவை
70 லட்சம் ரூபாய்க்கு நடந்து முடிந்த மெகா எழுத்தில் சென்னை அணி நிர்வாகம் கைப்பற்றியது. ஸ்பின் பந்து வீச்சில் அவர் சென்னை அணிக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுப்பார் என்று வல்லுனர்கள் கணித்துள்ளனர். ஆனால் தற்பொழுது அவரும் இஞ்சுரி காரணமாக சிகிச்சை எடுத்து வருகிறார்.

தொடைப்பகுதியில் உள்ள தசையில் சிறிய பிளவு அவருக்கு ஏற்பட்டுள்ளது. அது சம்பந்தமான சிகிச்சை எடுத்து வரும் அவர் கூடிய விரைவில் குணமடைந்து விடுவார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் சென்னை அணிக்கு முதல் போட்டியில் இருந்து விளையாட அவர் தயாராகி விடுவாரா என்பது கேள்விக்குறிதான்.

மேல் குறிப்பிட்டுள்ள மூன்று வீரர்களும் கூடிய விரைவில் குணமடைந்து சென்னை அணிக்கு முதல் போட்டியில் இருந்து விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் நிலையில், அவர்கள் நினைப்பது போல கூடிய விரைவில் இவர்கள் அனைவரும் குணமாகி விளையாட தயாராகி விடுவார்கள் என்று நாமும் நம்பிக்கை வைப்போம்.