2023 தமிழ்நாடு பிரிமியர் லீக் டிஎன்பிஎல் டி20 தொடர் சில நாட்களுக்கு முன்பு தொடங்கி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
நேற்று இந்தத் தொடரில் நெல்லை ராயல் கிங் மற்றும் லைகா கோவை கிங்ஸ் இரண்டு அணிகளும் மோதிக்கொண்டன. டாஸ் வென்ற நெல்லை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்த ஆட்டத்திலும் கோவை அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லோரும் சுமாரான பங்களிப்பை தந்து நகர்ந்து கொண்டே இருந்தார்கள். ஆனாலும் முதல் ஆட்டம் போலவே சாய் சுதர்சனின் ஆட்டம் தீ மாதிரி இருந்தது.
மிகச் சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சன் 52 பந்துகளில் ஏழு பவுண்டரி நான்கு சிக்ஸர்கள் உடன் 90 ரன்கள் எடுத்து இறுதியில் ஆட்டம் இழந்தார். கேப்டன் ஷாருக்கான் 17 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் கோவை அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது.
இதற்கு அடுத்து பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய நெல்லை அணிக்கு மூன்றாவது வீரராக களம் இறங்கிய குருசுவாமி அஜிடேஸ் மிகச் சிறப்பான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இவரது பேட்டில் பட்ட பந்துகள் பவுண்டரிக்கும் சிக்ஸருக்குமாக பறந்தது. கொஞ்சம் கொஞ்சமாக இலக்கை நோக்கி அணியை வழிநடத்தி எடுத்துச் சென்றார். 60 பந்துகளை சந்தித்த இவர் 7 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் உடன் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஆண்டில் அடிக்கப்பட்ட முதல் சதம் ஆகும்.
கடைசி ஓவருக்கு நகர்ந்த ஆட்டத்தில் கடைசி இரண்டு பந்துகளில் ஏழு ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. அந்த நேரத்தில் களத்திற்குள் வந்த பொய்யாமொழி கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் அபாரமான சிக்சர் ஒன்றை அடிக்க, ஆட்டம் எளிதாக நெல்லையின் பக்கம் வந்தது. கடைசிப் பந்தில் ஒரு ரன் எடுத்து திரில் வெற்றியை நெல்லை பெற்றது.
டிஎன்பிஎல் தொடர் கடந்த வருடத்திற்கு இந்த வருடம் இன்னும் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. பல இளம் வீரர்கள் தங்களது திறமையை நிரூபித்து வருகிறார்கள். அடுத்தடுத்த வருடங்களில் ஐபிஎல் தொடரில் தமிழக வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் ஆச்சரியம் இல்லை!
What a crazy final over victory for Nellai Royal Kings in the TNPL.pic.twitter.com/z974DjYKHb
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 16, 2023