இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது.
இந்த தோல்விக்கான முக்கிய காரணம் குறித்து ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்த போட்டியில் டாஸ் இழந்த ஜிம்பாப்வே அணி முதலில் பந்து வீசியது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் கில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் குவித்தது. ஜெய்ஸ்வால் 36 ரன்களில் வெளியேற, முந்தைய போட்டியில் சதம் விளாசிய அபிஷேக் சர்மா 10 ரன்களில் இந்த முறை நடையைக் கட்டினார். அதற்குப் பின் களம் இறங்கிய ருத்ராஜ் 49 ரன்கள் குவிக்க, இந்திய அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. கேப்டன் கில் சிறப்பாக விளையாடி 49 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார்.
அதற்குப் பின்னர் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே குவித்தது. ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக டியான் மையர் 65 ரன்கள் குவித்தார். இதில் ஏழு பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும். இந்திய அணித் தரப்பில் சுந்தர் 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கட்டுகள் கைப்பற்றினார்.
இந்தப் போட்டிக்குப் பிறகு ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா தோல்வி குறித்து கூறும் பொழுது “இன்றைய ஆட்டத்திலும் நாங்கள் சில இடங்களில் பீல்டிங்கில் தடுமாறினோம். ஆனால் கடந்த ஆட்டத்தை விட தற்போது ஓரளவு நன்றாக செயல்பட்டு இருக்கிறோம். இந்த போட்டியில் நாங்கள் கூடுதலாக இருபது ரன்கள் கொடுத்ததால் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறோம். டாப் ஆர்டரில் பேட்டிங்கில் எங்களுக்கு இன்னும் பிரச்சனைகள் இருக்கின்றன.
ஆனால் சரியான நேரத்தில் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் நாங்கள் 15 வீரர்களை டாப் ஆர்டரில் முயற்சித்து பார்த்திருக்கிறோம். அணி தற்போது புத்துயிர் பெற்றுள்ளது. நான் உட்பட அனைத்து வீரர்களும் பொறுப்பை ஏற்க வேண்டிய நேரம் இது. இது சிக்கலை சரி செய்வதற்கான சரியான காலகட்டமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஒரு சில காரணங்களுக்காக நாங்கள் மூன்று துவக்க ஆட்டக்காரர்களை தேர்ந்தெடுத்துள்ளோம்.
இதையும் படிங்க:எங்க பேட்ஸ்மேன்தான் எங்களுக்கு அதுல பிரஷர் போட்டுட்டாங்க.. சனிக்கிழமையே அதை முடிச்சிடுவோம் – வாஷிங்டன் சுந்தர் பேட்டி
முசர்பானியை பற்றி பேசுவதை நாம் நிறுத்த வேண்டும். அவருக்கு இந்த காலகட்டம் சிறப்பாக அமையவில்லை. ஆனால் அவர் நிச்சயம் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறி இருக்கிறார். இந்த போட்டியின் மூலம் இந்திய அணி தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.