இந்திய அணி இன்று ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-1 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இன்று இந்திய அணிக்கு பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருது வென்ற வாஷிங்டன் சுந்தர் வெற்றி குறித்து பேசியிருக்கிறார்.
இன்றைய போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக முடிவு எடுத்து களமிறங்கியது. மேலும் இந்திய அணியில் இன்று மொத்தம் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. துவக்க ஆட்டக்காரராக வந்த ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆரம்பித்து 27 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார்.
இந்த முறை பேட்டிங்கில் மூன்றாவது இடத்தில் வந்த முதல் ஆட்டத்தில் சதம் அடித்த அபிஷேக் சர்மா ஒன்பது பந்தில் 10 ரன்கள் எடுத்தார். சிறப்பாக விளையாடிய கேப்டன் கில் 49 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். நான்காவது இடத்தில் வந்த ருதுராஜ் அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்திய அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் சேர்த்தது.
தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப் அணி ஏழு ஓவர்களுக்கு 39 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. அங்கிருந்து ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து அதிரடியாக விளையாடி 159 ரன்கள் சேர்த்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டியான் மேயர் 49 பந்தில் 65 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் பந்துவீச்சில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் நான்கு ஓவர்களில் 15 ரன்கள் மட்டும் விட்டு தந்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆட்டநாயகன் விருது வென்ற வாஷிங்டன் சுந்தர் பேசும்போது “இது மிகவும் சிறப்பான உணர்வாக இருக்கிறது. மேலும் நாட்டிற்காக ஒவ்வொரு முறை விளையாடும் பொழுதும் அது அருமையான ஒன்று. நாங்கள் இங்கு விளையாடிய முதல் இரண்டு போட்டிகளை விட இன்று ஆடுகளம் பந்துவீச்சுக்கு நன்றாக இருந்தது. இது நிச்சயம் சிறந்த ஒரு விக்கெட் என்று கூறலாம்.
இதையும் படிங்க : ஒரே விக்கெட்டில்..13 ஓவர்கள் 120 ரன்கள்.. பயம் காட்டிய ஜிம்பாப்வே.. இறுதியில் வென்ற இந்திய அணி
எங்களுடைய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். எனவே நாங்கள் சிறப்பாக செயல்பட்டு அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய பிரஷர் அவர்களால் எங்களுக்கு உருவாகிவிட்டது. ஜிம்பாபேவில் நிறைய நல்ல இடங்கள் இருக்கிறது. அல்லது இன்னும் சில இடங்களை ஓய்வில் பார்ப்போம் என்று நினைக்கிறேன். அனேகமாக சனிக்கிழமை நடைபெறும் நான்காவது போட்டியிலேயே தொடரை வென்று விடுவோம்” என்று கூறியிருக்கிறார்.