“பும்ரா எப்போது வருவார்?” – வழக்கம்போல் உண்மையை உடைத்து விட்ட ரோகித் சர்மா!

0
522
Rohitsharma

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் என கைப்பற்றியது.

இந்த நிலையில் அடுத்த தொடரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. ஒரு நாள் தொடரில் முதல் போட்டி இன்று இந்திய நேரப்படி இரவில் தொடங்குகிறது.

- Advertisement -

தற்பொழுது நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் உலகக் கோப்பை இந்திய அணியில் நான்காவது இடத்திற்கான வீரர் யார்? இரண்டாவது விக்கெட் கீப்பர் யார்? என்பதை கண்டறிவதற்கான மிக முக்கியமான தொடராகும்.

இந்தத் தொடருக்கு வீரர்கள் தயாராகி வருகின்ற நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இடம் சில முக்கியமான கேள்விகள் பத்திரிகையாளர்களால் முன்வைக்கப்பட்டது. வழக்கம்போல் ரோகித் சர்மா தன்னுடைய பாணியில் அதற்கு உண்மையை உடைத்து பேசியிருக்கிறார்.

ரோகித் சர்மா இடம் பும்ரா பற்றிய கேள்வியும் வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய ரோஹித் சர்மா
“பும்ரா அணிக்கு திரும்பும் பொழுது அவர் கொண்டு வரும் அனுபவம் மிகவும் முக்கியமானது. தற்போது அவர் கடுமையான காயத்தில் இருந்து வருகிறார். மேலும் அணி இன்னும் அறிவிக்கப்படாத காரணத்தால் அவர் அயர்லாந்துக்கு செல்வாரா? என்று எனக்குத் தெரியாது.

- Advertisement -

அவர் விளையாடினால் அது நமக்கு நல்லது. அவர் விளையாடுவார் என்று நானும் நம்புகிறேன். ஒரு வீரர் கடுமையான காயத்திலிருந்து திரும்பும் பொழுது ஆட்டத்திற்கான உடல் தகுதி மற்றும் மேட்ச் ஃபீலிங் ஆகியவை முக்கியமானவை. ஆனால் அவையெல்லாம் தற்பொழுது காணப்படவில்லை.

அவர் உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் பெறுவாரா என்று சொல்ல முடியாது. எல்லாமே அவர் குணமடைவதை பொறுத்து தான் இருக்கிறது. கையில் இருக்கும் திட்டத்தின் படி நாங்கள் மேற்கொண்டு பார்ப்போம். அதே சமயத்தில் நாங்கள் தேசிய கிரிக்கெட் அகாடமியின் உடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். இந்த நேரத்தில் விஷயங்கள் நேர்மறையாகவே செல்கிறது!” என்று கூறியிருக்கிறார்.

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, தற்பொழுது பெங்களூரில் அமைந்திருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் கண்காணிப்பின் கீழ் மறு வாழ்வில் இருந்து வருகிறார். அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் நம்பிக்கையானதாகவே இருக்கிறது. மேலும் அவர் தினமும் குறைந்தது ஏழு ஓவர்களுக்கு மேல் பந்து வீசி வருவதாகவும் சொல்லப்படுகிறது. சமீபத்தில் ரசிகர் ஒருவர் மூலமாக அவர் வலையில் பந்து வீசும் வீடியோ ஒன்றும் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி அடுத்து ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் ஆசிய கோப்பையில் விளையாட இருக்கிறது. மேலும் உலக கோப்பைக்கு முன்பாக இந்தியாவில் வைத்து ஆஸ்திரேலியா அணி உடனும் விளையாட இருக்கிறது. எனவே பும்ரா திரும்பினார் என்றால் அவருக்கு பயிற்சிக்கு உலக கோப்பைக்கு முன்பாக சர்வதேச ஆட்டங்களே இருக்கிறது!